செவ்வாய், 11 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 5

ழக்கமான தேநீர் பலகார உபசரிப்புக்கு இடையில, அவரோட மண்டைக்குள்ளார விடாமக் கொடஞ்சுக்கிட்டு இருந்துச்சு மேற்படி “வார்த்தை”. சாஞ்சநாற்காலில மல்லாந்து, மோட்டுவளையவே மொறச்சுப் பாத்துக்கிட்டுக் கெடந்தாரு பலவேசம்.
 
“புத்தகத்தையும் தாண்டின பொது அறிவோட தேவை
அவரு மனசு உணர்ந்துச்சு.


பொது அறிவுங்கிறது எல்லாத்துக்கும் “பொது”, அதத் தானும் பங்கு போட்டுக்கிறது, தன்னோட கொள்கைக்கி விரோதம்னு நெனச்சுக்கிட்டு இருந்தாரு பலவேசம். அடுத்தவிங்க பொருளுக்கு என்னைக்குமே ஆசப்பட்டதில்ல அவரு. அவருக்குண்டான பொது அறிவாகப்பட்டது, உள்ளூரு தேநீர்க் கடையோட பழய நாளிதழ்கள் அளவுலதான் இருந்துச்சு. பண்ணையாளோட சேந்து, தன்னோட தோட்டத்துல வெவசாயம் பாக்குறதுதான் அவரோட ஆகச்சிறந்த பொழுதுபோக்கு. மத்தபடி, எப்பயாச்சும் கருப்பு வெள்ள படங்களப் பாக்குறதுக்கு மட்டுந்தான் தொலைக்காட்சிப் பொட்டி பக்கம் போவாரு.  அந்தவகையில, அதுல வர்ற செய்திக பக்கம் தலை வச்சும் படுத்தது கெடையாது. ஏன்னாக்க, யாரவது பொய்யி சொன்னா அவருக்கு அறவே புடிக்காது...  துசுட்டனக் கண்டா தூர வெலகிப் போயிருவாரு.

ஆழ்ந்த சிந்தனையில கெடந்தவர, “ஏங்க... நாளைக்கு மக வீட்லேருந்து வர்றாங்க. கொஞ்சம் மளிகைச் சாமான்கள் வாங்கணும்...” ங்கிற வீட்டுக்காரம்மாவோட சத்தம் சுயநினைவுக்குக் கொண்டு வந்துச்சு.

“தேர்ச்சி மதிப்பெண்ணை எட்டிப்புடிச்ச மாணாக்கன்” மாறி பிரகாசமானாரு பலவேசம்.

“ஆகா... அறிய வாய்ப்பு... ஒருவேளை வொர்க் சாப்பு ஓனர் வந்துருந்தா... அவன்கிட்ட ஒருவாட்டி கேட்டுப் பாத்துறலாமே..” ன்ற நப்பாசையில “சரி... சரி... சீட்டையும் பையையும் கொண்டா பெரியபட்டி பிரிவுல போயி வாங்கிட்டு வந்துர்றேன்”  ன்னாரு பரபரப்போட.

“அதுக்கு எதுக்கு அம்புட்டு தூரம் போவணும்...? நம்மூர் நாடார் கடைலயே வாங்குறது தான...? கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்யிக்கு அலைஞ்ச கதையால்ல இருக்கு...” ன்னு அலுத்துக்கிட்டே, அவரோட  நப்பாசையில நாலுபடி மண்ணள்ளிப் போட்ருச்சு அந்தம்மா.

“பட்ட கால்லே படும்... கெட்ட குடியே கெடும்..” ங்கிற மாறி, “என்ன முயற்சி பண்ணாலும் எதுனா ஒரு தடங்கலு வந்துக்கிட்டே இருக்கே...” ன்னு நெனச்சவருக்கு,  ஒரு புது வழியக் காட்டுச்சு வீட்டம்மா சொன்ன சொலவட.  “கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்யிக்கு ஏன் அலையனும்...? பேசாம அகராதி எடுத்துப் பாத்துரலாமே...?” ன்னு தோனவும், பரவசத்தோட துள்ளி எந்திருச்ச பலவேசம், பரபரன்னு ஓடுனாரு அலமாரியப் பாத்து.

“இப்ப நம்ம என்ன சொல்லிப்புட்டோம்னு இவரு இப்புடித் துள்ளிக் குதிச்சு ஓடுறாரு?” ன்னு மெரண்டு போயிருச்சு அந்தம்மா.

பல நிமிசப் போராட்டத்தோட முடிவுல, தூசி படிஞ்ச அகராதியும் கையுமாத் திண்ணையில போயி ஒக்காந்தாரு பலவேசம். அவரு படிக்கிற காலத்துல வாங்கினது அது. வந்த வேகத்துல “வாழாவெட்டியா”ப் போச்சு. பல வருசப் பிரிவுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கு “வாழ்க்கை” குடுக்கத் துணிஞ்சிருக்காரு.

“என்னாச்சு இந்த மனுசனுக்கு...?” ன்னு அவரப் பாத்த வீட்டுக்காரம்மாவுக்கு, கேணச் சிரிப்பு ஒன்ன பதிலாக் குடுத்துப்புட்டு, அகராதியோட ஒறவாடத் தயாரானாரு பலவேசம்.

“இப்ப கடைக்குப் போகப் போறீங்களா இல்லையா...?” ன்னு சத்தங் கொஞ்சந் தூக்கலா வந்துச்சு அங்கிட்டு இருந்து.

“என்ன அவசரம். மெதுவாப் போறேனே...?” ன்னு வீட்டுக்காரம்மாவக் கண்டுக்காம பதில் சொன்னாரு பலவேசம்.

தாஞ்சொன்ன வேலையச் செய்யாம, வேற என்னாத்தையோ செய்யத் துணிஞ்சவரோட அலட்சியத்த, கொஞ்சமும் எதிர்பாக்காத அந்தம்மா, “அவரோட மல்லுக்கட்ட நமக்கு நேரமில்ல...” ங்கிறத, அடுப்பங்கர ஞாவகப்படுத்த, “என்னமோ பண்ணித் தொலைங்க...” ன்னுட்டு, சண்டையத் தள்ளிவச்சுப்புட்டு அடுப்பப் பாக்கப் போயிருச்சு.

“முனைவர் பட்டம் பெற முனையும் மாணாக்கன்...” மாறி மளமளன்னு பக்கங்களைப் பிராண்டினாரு  பலவேசம். “அந்த வார்த்தை” யோட மொதல் எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைக இருக்க பக்கத்துக்கு  வந்தப்ப, விக்கலெடுத்துருச்சு அவரோட முயற்சிக்கு. “சரி இவ்ளோ தூரம் யோசிச்சோமே... அந்த வார்த்தைக்கு என்ன ஸ்பெல்லிங்ன்னு யோசிச்சோமா...?”

அடுத்த போராட்டத்துக்குத் தயாராயிட்டாரு அவரு.

தன்னோட “பட்டறிவு, பொது அறிவு, அனுபவ அறிவு, ஆறாவது அறிவு எழாவது அறிவு” ன்னு அம்புட்டையும் தொணைக்குச் சேத்துக்கிட்டு, ஒரு கைதேந்த சிற்பி கணக்கா, “அந்த வார்த்தை” க்குண்டான ஆங்கில எழுத்துக்களை யோசிச்சுக் கோர்த்தவரு, அது மறந்து போவாம இருக்க, பெஞ்சக் குச்சி எடுத்து ஒரு காயிதத்துல குறிச்சு வச்சுக்கிட்டாரு.

அடுத்தாப்புல, ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிக் கூட்டி, மொத மூனு எழுத்து வரை வார்த்தைக இருக்க பக்கத்துக்கு வந்துட்டாரு. அதுல ஆரம்பிக்கிற வார்த்தைக நெறைய இருந்துச்சு அகராதியில. வாயெல்லாம் பல்லா “ஆகா... இன்னும் கொஞ்சந்தான்...” ன்னு கூப்பாடு போட்டுச்சு மனசு.

நாலாவது எழுத்தயும் சேத்து அதுல ஆரம்பிக்கிற வார்த்தைக வரை வந்தவரு, சோதனைக்கு வந்த கல்வி அதிகாரியக் கண்டவரு மாறி அரண்டு போயிட்டாரு. “மாங்கு மாங்குன்னு படியேறிப் போனாக்க... அங்க... மாடியவே காணாமா...” ங்கிற கதையாப் போச்சு அவரு பொழப்பு. மிகச் சொற்பமே இருந்த அந்த வார்த்தைகள்ல, சரித்திரப் பிரசித்தி பெத்த “அந்த வார்த்தை” ய மட்டும் காணல. எதத் தேடுறதுன்னே தெரியாம... தேடு தேடுன்னு தேடுன்ன அவரோட தேடுதல் வேட்டை... கடைசில அவரப் பாத்தே பல்லிளிச்சுருச்சு.

ஏமாத்தத்தோட வலியத் தாங்க முடியல அவரால. துக்கம் தொண்டைய அடச்சுருச்சு.

தன்னோட பிரச்சனைய யாருக்கிட்ட சொல்றதுன்னே தெரியல. வீடுக்காரம்மாக்கிட்ட கேக்கலாம்னாக்க, அவளோ... படிக்காத பட்டிக்காடு. நமக்கே தெரியல, அவளுக்கு எங்க தெரியப் போவுது...? அப்புடியே கேட்டாலும், “இது கூடத் தெரியாமயா இவ்ளோ நாளா நீங்க வாத்தியார் வேல பாக்குறீங்க...?” ன்னு கேட்டுப்புட்டா பெருத்த அவமானமாப் போயிருமே...? சரி... கல்லூரியில படிக்கிற மகங்கிட்ட, கைபேசி வழியாக் கேக்கலாம்னா... அதுக்கு அவரோட தன்மானம் எடங்குடுக்கல. தேள் கொட்டுன திருடங்கணக்கா முழிச்சுக்கிட்டு இருந்தாரு பலவேசம்.

அதுக்கு மேலயும் வேலை செய்ய அவரு மூளை தயாரா இல்ல... ரொம்ப மனச்சோர்வா போச்சு... இருந்தாலும், “சரி... நம்ப பிரச்சனைய நம்மளேதான் தீத்துக்கணும்... இன்னோரு வாட்டி தேடிப்பாக்கலாமா...” ன்னு அவரு நெனச்சதுதான் தாம்சம்.

“அய்யா...” ன்னு கொரலு கேட்டுச்சு வெளில...

யார்றான்னு பாத்தாக்க... பண்ணையாளு பெரியசாமி வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாரு.

“வாங்கையா... உள்ள வாங்க...” ன்னு கூப்புட்டு திண்ணையில ஒக்கார வச்சாரு பலவேசம்.

அந்த வட்டாரத்துலையே வத்தாத கேணிகள்ல பலவேசம் தோட்டத்து கேணியும் ஒன்னு. நெல்லு, வாழைன்னு வெள்ளாம நடக்கும். ரெண்டு மூணு தலமொறையா பெரியசாமி குடும்பந்தான் பலவேசம் தோட்டத்துல பண்ணையம் பாத்துக்கிட்டு இருக்கு. முப்பது நாப்பது வருச ஒழைப்பு பெரியசாமிய அசர வக்கில, ஆனா அவரு சம்சாரத்தோட சாவு அவர அசரவச்சுருச்சு. மக வீட்டுக்குப் போயி கடைசி காலத்த ஓட்டிரலம்னு முடிவு பண்ணிட்டாரு.

கூலிக்கு ஆளு கெடைக்காத இந்த நாள்ல, பெரியசாமி போனதுக்கப்புறமா என்ன பண்ணப் போறோம்ன்னு நெனைக்கிறப்ப வெசனமாத்தான் இருந்துச்சு பலவேசதுக்கு. இருந்தாலும், பெரியசாமிக்கு செய்யவேண்டியதெல்லாம் அவரு கொறையில்லாமத்தான் செஞ்சு குடுத்தாரு.

ஊருக்குப் போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போலாம்ன்னு வந்துருக்காரு பெரியசாமி. அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதையச் செஞ்சு அவர நல்லபடியா அனுப்பி வச்சாரு பலவேசம். அன்னைக்கி இருந்த மன நெலமையில, அவருக்கு அழுவையே வந்துருச்சு. இவ்ளோ நாளா, வீட்டுல ஒரு ஆளா, ஒன்னு மண்ணா இருந்துட்டு, பெரியசாமி போறத நெனச்சா நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்துச்சு அவருக்கு.

ராச்சாப்பாட்டுக்கு அப்பறம், வழக்கத்துக்கு மாறா, மொட்ட மாடில பாயைப் போட்டு படுக்கப் போனாரு பலவேசம். “இவருக்கு நெசமாவே எதோ ஒன்னு ஆகிப்போச்சு...” ன்னு பயந்து போன வீட்டம்மா, “ஒரு வேளை... பெரியசாமி போறத நெனச்சு மனசொடஞ்சு போயிட்டாரு போல...” ன்னு நெனச்சு மனச தேத்திக்கிருச்சு.

தூக்கம் புடிக்காம வானத்த வெறிச்சுப் பாத்த்துக்கிட்டே, ரொம்ப நேரம் படுத்துக் கெடந்தாரு பலவேசம். அம்மாவாச ராத்திரி, கரும்பலகை வானத்துல ஓட்டைகளைப் போட்டு, அதுவழியா அவர எட்டிப் பாத்து, எகத்தாளமா சிரிச்சிக்கிட்டு இருதுச்சுக நட்சத்திரங்க. தனக்கு சொல்லிக்குடுத்த வாத்திமாரு மொதக்கொண்டு உள்ளூரு அரசியல்வாதிக வர, யார் யாரு மேலயோ கோவங்கோவமா வந்துச்சு அவருக்கு.

“நா என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்... எனக்கு சொல்லிக் குடுத்த படிப்பு அம்புட்டுத்தான்... அந்தக் காலத்துல அதுவே ரொம்ப அதிகம்... அப்புடி இருக்கப்ப... இப்ப பாடத்த இவ்ளோ மேம்பாடா வச்சது யாரு குத்தம்...? என்னோட தெறமை என்னான்னு தெரியாம யாரு இப்புடி வைக்க சொன்னது...?  சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்...? ஆப்பையில அறிவ அள்ளுறதுக்கு முன்னாடி அத சட்டிலல்ல போட்டுருக்கணும் இந்த சர்க்காரு...? இது சர்க்காரு குத்தமா...? இல்ல நம்ப குத்தமா...? வெள்ளைக்காரன் நம்பள விட்டுட்டுப் போனாலும் அவன் மொழி நம்மளப் புடிச்சு அமுக்கிக்கிட்டு கெடக்குதே...? தமிழ் நாட்டுல தமிழு மட்டும் தெரிஞ்சிக்கிட்டு இருக்கறது குத்தமா...?”

ஒன்னுமே புரியல அவருக்கு...

“ஆங்கில வழிக் கல்வியில “அந்த வார்த்தைய” வச்சவன்... ஏன் தமிழ்ல அத வைக்கல...?” சின்னப்பாண்டியோட கேள்வி ஞாயமாப் பட்டுச்சு அவருக்கு. “அவங் கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத்  தெரியலைன்னா... அப்ப நா என்ன முட்டாளா...? அப்புடி நா முட்டாளுன்னா... நா படிச்ச படிப்புக்கும்... இதுநா வர பாத்த வாத்தியார் வேலைக்கும் என்ன அர்த்தம்...? என்ன மருவாத...?”

கோடையிடி மின்னல் மாறி கவட்டை கவட்டையா வேரோடிச்சு கெள்விக... தன்னோட பிரச்சனைக்கும் இந்த கேள்விகளுக்கும் எதுனா ஒட்டு இருக்கான்னு தெரியாமையே, அவரோட சிந்தனை “அந்த வார்த்தை” க்கொசரம் குமுறிக்கிட்டு கெடந்துச்சு.

கரி பூசிக்கிட்ட கரும்பலகை மாறி கவுந்து கெடந்துச்சு ராத்திரி... எதுக்குமே வசப்படாத அவரு சிந்தனை கடைசில தூக்கத்துக்கு வசப்பட்டுருச்சு...

பலவேசத்தோட ராத்திரி இங்க இப்புடி இருக்க...அங்க என்னடானாக்க... சின்னப்பாண்டியோட ராத்திரி ஒரே ரணகளமா இருந்துச்சு...!



குடைச்சல் தொடரும்...



21 கருத்துகள்:

  1. அலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...

    பதிலளிநீக்கு
  2. நட்சத்திரம் கூட சிரிக்கிற மாதிரி தெரியுது... (!)

    ரணகளமா...? ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கும்பா...
      கிளாஸ்க்கு வந்து கர்த்து சொல்லிக்கினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  3. அங்கே மட்டுமா ரணகளமா இருந்துச்சு ?உங்க எழுத்து நடையே ரணகளமாத்தானே இருக்கு ?வரிக்கு வரி ரசிக்கும் படியா இருக்கு ,இந்த வாரமும் ஒரு முடிச்சை போட்டு நிறுத்திட்டிங்களே!அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க நைனா !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா... பதிவு தயாரா கீதுபா... படம் ஒண்டிதான் போடணும்... குவிக்கா போட்டு வுட்டுர்றேம்பா...

      நீக்கு
  4. அட! என்னா வாத்தியாரே நீ, சீக்கிரம் அந்த வார்த்தை என்னன்னு சொல்லுபா.

    "//வந்த வேகத்துல “வாழாவெட்டியா”ப் போச்சு. பல வருசப் பிரிவுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கு “வாழ்க்கை” குடுக்கத் துணிஞ்சிருக்காரு.//"

    ரொம்ப ஜோரா எழுதிகினு வரப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவடும்பா...

      நம்ப வூட்டாண்ட வந்து கர்த்து சொல்லிக்கினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  5. எழுத்து நடை சுவாரஸ்யம் ஊட்டுகிறது! அதே சமயம் சஸ்பென்ஸ் இழுத்தடிப்பதால் ஒரு சலிப்பு எழுகிறது! கவனமாயிருங்க நைனா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா...
      சலிப்பா இர்க்குன்னு கிளாசுக்கு வந்துராம இர்க்காதாபா...

      நீக்கு
  6. நல்லா கீதுப்பா உன் நாயம்! இந்த வாரமும் அந்த வார்த்தையை சொல்லாம டபாய்ச்சுட்டியே!

    எல்லாம் போட்டாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னாபா பண்றது... எல்லாத்தையும் சொல்லி வர வேண்டி கீதுல...

      ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  7. அட தெரிஞ்ச மொழில சொல்லுப்பா !
    இங்கிலீஷ் டீச்சர் நான் எல்ப் பண்றேன்!
    but ஒரு கண்டிசன் என்னை அக்காக்குனு சொல்லுறத்துக்கு
    முன்னாடி டேட் ஆப் பெர்த் சொல்லிடுங்க சகோ!
    நான் அப்றமா முடிவுபன்ன்றேன்! ஆமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவட்டும் டீச்சர்...! எதுக்கு நமக்குள்ளாற பிரச்சனை...? இனிமே சகோ...ன்னே கூப்டுக்கலாம்... :-)

      நீக்கு
  8. ஆஹா! நைனா! எப்படி இப்படி ஒரு ரகசியத்தை முடிச்சு அவிழ்பதில் தொடர் பதிவாகப் போட முடிகிறது உங்களால்! என்ற ஆச்சரியத்துடன் கூடவே, நீகள் சொல்லிச் செல்லும் நமது கல்வியைப் அற்றியச் செய்திகளும், யதார்த்த வாழ்க்கையின் சம்பாஷணைகளின் சுவாரஸ்யங்களும் மிக அருமையான கதை நடையில் சொல்லிச் செல்கின்றீர்கள்!

    ரகசியத்தை ரசிக்கிறோம்!!!

    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்த்துக்கும் ஓட்டுக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  9. அசத்தலான படங்கள்! தங்களின் வரையும் திறமைக்கு ஒரு ஷொட்டு!!!!!

    பதிலளிநீக்கு
  10. ஒரு கேள்வியை வைத்து, நன்றாக கதையை நகர்த்துகிறீர்கள், சீக்கரம் அது என்னானு சொல்லிடுங்க.... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாடோடி அவர்களே...!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...