ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஓட்டா...? துட்டா...? நோட்டா...?



ஓங் கட்ச்சில இன்னான்றான்...
“ஓட்டுக்கு நோட்டுடா பேமானி” ன்றான்...!

எங் கட்ச்சில இன்னான்றான்... 
“ஓட்டுக்கு துட்டுடா சோமாரி” ன்றான்...!

எலிக்சன் கமிசன் இன்னான்றான்...
“ஓட்டுக்கு துட்டா...? 

அல்லாம் கெடியாது...
ஒயுங்கா போடுநீ ஓட்ட”
ன்றான்...!


புச்சாக்கீற பார்ட்டி இன்னான்றான்...


“பாலிடிக்ஸ் பார்ட்டிலாம் வுட்றாம்பாரு பீலா
நம்பிட்டேன்னா அப்பாலநீ நொந்துருவ நூலா...
நல்லா நீயும் நென்ச்சுப்பார்றா மொள்ளமாறி
நோட்டுக்கு ஓட்டுமில்ல... ஓட்டுக்கு நோட்டுமில்ல...

ப்ரீயா வெட்டிருவான் பிச்சாத்து மாலு
நெரியா அட்ச்சுருவான் அப்பாலநீ பாரு...
ஒயுங்கா நீயும் ஒர்சிப்பார்றா முடிச்சுமாறி
ஓட்டுக்கு துட்டுமில்ல... துட்டுக்கு ஒட்டுமில்ல...

கடிசீல கேட்டுப் போடா கேப்மாறி
நோட்டாதான் ஓட்டு... ஓட்டுதான் நோட்டா
ன்றான்...!
 

விடிய விடிய கேட்டுக்கினு
உசார் பக்கிரி இன்னான்றான்...
நோட்டா காண்டி போடுன்றேநீ

நோட்டில்லாது எப்டீ...?” ன்றான்...!

மெய்யாலுமே அண்ணாத்தே
கிர்ர்ருங்கிது அல்லாமே...!


“கவுருமண்டு தண்ணி” மேறி
ஒன்னியும் இங்க பிர்ல மாமே...?!




செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 8

ல்கோனாவக் கண்டுபுடிச்ச சந்தோசத்துல நேரம் போனதே தெரியல. நாயித்துக்கெழம மத்தியானம் முடிஞ்சுபோச்சு. ஆட்டம்பாட்டம்லாம் முடிஞ்சு பேரப்புள்ள ஊருக்குக் கெளம்பத் தயாராய்ட்டான். மக வீட்டார அனுப்பிட்டு வரலாம்ன்னு பெரியபட்டிக்குக் கெளம்புனாரு பலவேசம்.


வழக்கம்போல, பேரனக் கொஞ்சி, புள்ள குட்டிகள அனுப்பி வச்சுட்டு, அவுக போன தெசயவே கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டு நின்னவரு, சரி... வீட்டுக்குக் கெளம்பலாம்னு திரும்புறாரு... மூட்ட முடிச்சத் தூக்கிக்கிட்டு எதுக்க வருதுகைய்யா சின்னப்பாண்டி குடும்பம்.

சின்னப்பாண்டியப் பாத்ததும், ஏதோ சேக்காளியப் பாக்குற சின்னப் பய மாறி சந்தோசமா ஓடுனாரு அவங்கிட்ட.

“எலே சின்னப்பாண்டி... வல்கோனான்னா என்னான்னு கேட்டீல... அப்புடின்னா என்னான்னு தெரியுமாடா...?” ன்னாரு சந்தோசமா...

வாத்தியாரப் பாத்ததும் சந்தோசப்படுறதுக்குப் பதிலா அழுக வந்துருச்சு சின்னப் பாண்டிக்கு. துக்கம் தொண்டைய அடைக்க, கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு நிக்கிது...

“மொதல்ல அது வல்கோனா இல்லடா... அதுக்கு பேரு வல்கனோடா... அப்புடீன்னா எரிமலைன்னு அர்த்தம்டா... அதாண்டா... நம்ப சமூக அறிவியல் பாடத்துல கூட இருக்குல்லடா... அதாண்டா அது...” ன்னு உற்சாகமா சொல்லி வர்றாரு.

நாயமாப் பாத்தாக்க, இதக் கேட்டதும் துள்ளிக் குதிக்க வேண்டிய பய கேவிக் கேவி அழுவுறான்...

பக்குன்னு போச்சு பலவேசத்துக்கு...

“எலே... என்னடா ஆச்சு... ஏண்டா அழுவுற...?” ங்கிறாரு பதட்டத்தோட...

“சார்...” ன்னு சொன்னவனுக்கு அதுக்கு மேல வார்த்த வர்ல... மனச உருக்குற பாரத்த வெளிய உருவிப் போட்டு அழுவுறான் பய.

பலவேசத்துக்கா ஒன்னும் புரியல... கொழப்பமா பாக்குறாரு அவுக அப்பா அம்மாவ... பய அழுவுறதப் பாத்து, தாம்பங்குக்கும் மூக்கச் சிந்துது அவுக அம்மா... இதென்னடா இம்சையா இருக்குன்னு சங்கட்டமா நெளியிறான் அப்பங்காரன்.

“என்னடா ஆச்சு... சொல்லிட்டு அழுவுடா...” ன்னு அதட்டாலாக் கேக்குறாரு பலவேசம்.

“சார்... அது வந்து சார்... ஊருக்குப் போறோம் சார்...” ன்னு தெணறித் தெணறிச் சொல்லுறான் பய...

“ஊருக்குத்தாண்டா போற.... அதுக்கு எதுக்குடா அழுவுற...?”

“இல்ல சார்... ஊர விட்டே போறோம் சார்...” ன்னு சொல்லிட்டு கேவிக் கேவி அழுவுறான்...

அதுந்து போயிட்டாரு பலவேசம்... “என்னது...? ஊர விட்டுப் போறீங்களா...?”

அதுக்கு மேல ஒன்னும் பேச முடியல சின்னப்பாண்டியால... அழுதுக்கிட்டே அம்மாக்காரியப் பாக்குறான்...

“என்னாத்த சொல்றது...” ன்னு புருசங்காரனைப் பாக்குறா அவ..

“யாராவது சொல்லித் தொலைங்களே...” ங்கிறாரு காட்டமான பலவேசம்...

“இல்லைய்யா... வேலை வெட்டி கெடைக்காம... காவயித்துக் கஞ்சிக்கு வழியில்லாம... இந்த ஊருல இருக்குறதக் காட்டியும்... பேசாம வெளியூருக்குப் போயி... எதுனா வேல செஞ்சு பொழச்சுக்கலாம்னு... இந்த மனுசன்... வம்படியாக் கூட்டிக்கிட்டு போவுதுங்க...” ன்னு பொத்தி வச்ச சோகத்த பொங்கிப்புட்டா ஆத்தாக் காரி...

இடி விழுந்த மாறி இருந்துச்சு அவருக்கு.... வாயடச்சுப் போனவரு ஏறெடுத்துப் பாக்குறாரு அப்பங்காரன...

“ஆமங்கைய்யா... ஒங்களுக்கே தெரியும்... சுத்து வட்டாரத்துல சேந்தாப்புடி வேலை கெடைக்க மாட்டேங்கிது... புள்ள குட்டிகள வச்சுக்கிட்டு ரொம்பச் செரமமா இருக்கு... அதான்... ஆந்துராவுல முறுக்குக் கம்பேனில வேலைக்குப் போலாம்னு போறோம்யா... என்ன பண்றது...?” ன்னு சொன்னான் ஆத்தமாட்டாம...

“அப்ப... சின்னப்பாண்டியோட படிப்பு...?” ன்னு மனசுக்குள்ள மின்னல் மாறி வெட்டுது கேள்வி...

வல்கோனா விசயத்த சந்தோசமா சொல்லலாம்னு வந்தவருக்கு... வாழ்க்கையோட வலிய சொல்லாமப் புரியவச்சுப்புட்டான் சின்னப்பாண்டி...

என்ன சொல்றதுன்னே தெரியாம... பரிதாபமா பாத்தாரு சின்னப்பாண்டிய...

“நானும் முறுக்குக் கம்பேனில வேலை செய்யணும்னு அப்பா சொல்றார் சார்... ஏன் சார்... அந்த வேலை ஈசியா இருக்குமா சார்...? அந்த ஊருல பள்ளிக்கூடம்லாம் இருக்குமா சார்...? நான் வேலை பாத்துக்கிட்டே படிக்க முடியுமா சார்...? எங்க வீட்டுல படிக்க அனுப்புவாகளா சார்...?” ன்னு ஏக்கத்தோட கேக்குறான் அடுக்கடுக்கா கேள்விகள...

நெஞ்சுக் கூடு வெந்து போச்சு பலவேசத்துக்கு... ஆயிரம் ஈட்டியக் கொண்டு ஈரக்கொலையில குத்துறமாறி இருக்கு... புத்தகப் பைய கைல இறுக்கிப் புடிச்சுக்கிட்டு, திக்கத்து நிக்கிறவனப் பாக்குறாரு... ஒரு கணம்... அவரோட பேரனைப் பாக்குறா மாறியே இருக்கு...

“ஏன் சார்... நான் அங்க போயிட்டா... யாருக்கிட்ட சார் சந்தேகம்லாம் கேப்பேன்... ஒங்கள மாறி சொல்லித்தர எனக்குன்னு அங்க யாரு சார் இருக்கா...?” ன்னு அவன் கேட்டதுதான் தாமசம்... “படீர்...” ன்னு ஒரு நரம்பு அந்துபோச்சு அவரு இருதயத்துல...

அப்புடியே மடங்கி விழுந்து... சின்னப்பாண்டியக் கட்டி அணைச்சுக்கிட்டாரு பலவேசம்...

பொழுசாய கூட்டுக்குத் திரும்புற காக்கா குருவில்லாம் இந்தக் கூத்தப் பாத்து கதறிக்கிட்டே போவுதுக...!

காப்பருச்சை விடுமுறை மாறி சுருக்கா கழிஞ்சு போச்சு ஆறு மாசம்... பலவேசம் வாழ்க்கைதான் எப்புடி மாறிப்போச்சு...? காலங்காலமா கடைபுடிச்சு வந்த கரட்டுப்பட்டி கல்விக் கொள்கையை தலையச் சுத்தித் தூக்கிப் போட்டுட்டு...  “எந்தெந்த வகையில எப்புடில்லாஞ் சொல்லிக் குடுக்கலாம்...” ன்னு எப்பயும் யோசிச்சுக்கிட்டே இருக்கு மனசு... இப்பல்லாம் அவரு, பசங்களுக்கு வெறும் பாடம் மட்டும் சொல்லிக்குடுக்குறது இல்ல, பொது அறிவையும் சேத்தே சொல்லிக்குடுக்குறாரு. பொது அறிவு சம்பந்தப் பட்ட விசயங்கள்லாம் தேடித் தேடி தானும் படிக்கிறாரு.

மனசு நெறஞ்சு கெடக்கு... இப்பத்தான் புதுசா வாத்தியாரு வேலைக்கு வந்தாமாறி இருக்கு. இன்னும் நெறைய வருசத்துக்கு பசங்களுக்கு சொல்லிக் குடுக்கனும்னு ஆசை ஆசையா இருக்கு.

அதுமட்டுமில்லாம, கரட்டுப்பட்டி பள்ளிக்கூடத்தையே தலைகீழா மாத்திப்புட்டாரு பலவேசம். ஊருல இருக்க எல்லாப் புள்ளைகளையும் கண்டிப்பா பள்ளிக்கூடத்துல சேக்கனும்னு, ஊர்ப் பஞ்சாயத்தக் கூட்டி உத்திரவு போடவச்சிட்டாரு.

பெரிய உத்தியோகத்துல இருக்க மருமகப்புள்ளய வச்சு, பஞ்சுமில்லு நிர்வாகத்துல பேசி, வேலைக்கிப் போன சின்னப் புள்ளைங்கள எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வரவச்சிட்டாரு. சுத்துவட்டாரத்துல இருக்க தொழிற்சாலைகள்ல பேசி, கரட்டுப்பட்டி ஆளுகளுக்கு வேலைவாங்கிக் குடுத்துட்டாரு. மகளிர் சுயஉதவிக் குழு மூலமா ஊருல இருந்த பெண்டுகளுக்கு சுயதொழில் கத்துக்க ஏற்பாடு பண்ணிட்டாரு. இதுக்கப்புறமா, எந்த ஒரு குடும்பமும், கொத்தடிமையா வெளியூருக்கு வேலைக்குப் போகாத அளவுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. ஏற்கனவே, கொந்தடிமையா போனவுகள, மீட்டுக் கொண்டுவர மாவட்ட ஆட்சியரு மூலமா ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.

“ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியாரான நம்பளால இவ்ளோ தூரம் செய்ய முடியுதா...?” ன்னு அவருக்கே ஆச்சிரியமா இருக்கு. எங்கருந்து தனக்கு இவ்ளோ பலம் வந்துச்சுன்னு இன்னைய வரைக்கும் அவருக்கு புடிபடல. சத்தமில்லாம ஒரு பெரிய புரட்சி பண்ணினவர, சமுதாயமும் இப்பத் திருப்பிப் பாக்குது. தடங்கலாயிப் போன “தேசிய நல்லாசிரியர் விருது” தானா வந்துருச்சு அவரத் தேடி...!

இவ்ளோக்கும் காரணம்...?

“சின்னப்பாண்டி கேட்ட கேள்வியும்... அவரோட தேடலுந்தான்...” னும் சொன்னா அது நெசமில்லாம வேறெயா இருக்குமா என்ன?

அப்ப... சின்னப்பாண்டி....?

அவங்கேட்ட அந்த ஒரு கேள்விதான்... அவன் வாழ்க்கைய எப்புடி தலைகீழா திருப்பிப் போட்டுருச்சு..?!!!

புது எடம்... முன்ன இருந்ததுக்கும் இப்பைக்கும் எவ்ளோ வித்தியாசம்...?!!!

இருக்க ஒரு நல்ல எடம்... நல்ல சோறு... நல்ல துணிமணிக... இத்தனைக்கும் மேல... இந்தா... பலவேசம் வாத்தியாரு கூடவே பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வர்ற பாக்கியம்...! புதுப்புது புத்தகங்க...! பலவேசம் வாத்தியாரு பேரப்புள்ளகூட சிநேகிதம்...!

“நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...? இந்நேரம் இங்லீசு பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருக்கலாம்... நம்பளும் நல்ல துணிமணி, சூ, டைலாம் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவலாம்... பளபளன்னு புத்தகம் வாங்கிப் படிக்கலாம்... நல்ல சாப்பாடு கெடைக்கும்... அப்பா அம்மா நம்பள திட்டாம அடிக்காம இருப்பாக...” ன்னு முன்ன நெனச்சுப் பாத்துருக்கானே... அதே மாறில்ல இப்ப ஒன்னொன்னா நடந்துக்கிட்டு இருக்கு...?!!!

“எங்கயோ ஆந்துராவுல... ஒரு முறுக்குக் கம்பேனில... படிக்கணுங்கிற ஏக்கத்த மனசுல சொமந்துக்கிட்டு... அடுப்புல வெந்து... அடிபட்டு... மிதிபட்ட ரணத்த ஒடம்புல சொமந்துக்கிட்டு... ஒரு நடபொணமா இருந்துருக்க வேண்டிய பய... இப்புடி பவுசா இருக்கமே...? இது கனாவா... இல்ல நெசமா...?” ஒன்னும் புடிபடல சின்னப்பாண்டிக்கு...!

இந்தா... அவுக அம்மா...

ஆசுமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கிது நல்ல மருத்துவமனையில...

“மூத்த புள்ளைக ரெண்டுந்தான் படிக்காமப் போச்சு, சின்னப்பாண்டியவாவது நல்லா படிக்க வச்சு பெரிய வேலைக்கி அனுப்பிறணும்...” ன்னு எம்புட்டு ஆசப்பட்டுச்சு... இப்ப... அதுக்குத்தான் எம்புட்டு சந்தோசம்...!!!

இந்தா... அவுக அப்பா...

“இக்கரைக்கு அக்கரை பச்சை ங்கிற கணக்கா...  இங்க இருந்து கருமாயப்படுறதக் காட்டியும், பேசாம வெளியூருப் பக்கம் போயி, வேற எதுனா வேலையைப் பாத்துப் பொழச்சுக்கலாம்...” ன்னு தவதாயப் பட்ட மனுசன்...

இப்ப... இந்தா... “மாடென்ன கண்ணென்ன... தொட்டமென்ன தொரவென்ன... வெள்ளாமயென்ன வெளச்சலென்னா...” ன்னு மூத்தபுள்ளைய கூட வச்சுக்கிட்டு... எம்புட்டு உற்சாகமா... வேல பாத்துக்கிட்டு இருக்காரு...!!!

ஆமா... பின்ன... பெரியபட்டியில... பண்ணையாளு பெரியசாமிக்குப் பதிலா... இப்ப பலவேசத்தோட பண்ணையத்தப் பாத்துக்குறது இவுகதான...?!!!

இந்தா... ஆடிமாசக் காத்துல அடிச்சுக்கிட்டுப் போற தூசிக மாறி... அடுத்த அஞ்சு வருசமும் ஓடிப்போச்சு...!

நடந்து முடிஞ்ச பத்தாப்புப் பரிச்சையில... “மாநிலத்துலையே மொத மதிப்பெண் வாங்கி... பெரியபட்டி பள்ளிக்கூடத்துக்கே பெருமை சேத்துருக்கான்...” ன்னு எல்லாரும் பாராட்டிக்கிட்டு இருக்காகளே... அது யாருன்னு நெனைக்கிறீக...? வேற யாரு...? நம்ப... சின்னப்பாண்டி தான்...!!!


குடைச்சல் முற்றும்...


Related Posts Plugin for WordPress, Blogger...