தலகீழா நின்னு தண்ணி குடிச்சுப் பாத்துட்டான் சின்னப்பாண்டி... ம்கூம்... ஒன்னும் வேலைக்கி ஆவலை... அவங்கிட்ட இருந்த பழைய புத்தகம் மொதக்கொண்டு, குப்பையில கெடந்த காயிதம் வரைக்கும் தேடிப் பாத்துட்டான்... ஒன்னும் அம்புடல. வேற வழியில்லாம, “சரி... நம்ப வாத்தியாரக் கேட்டுப் பாக்கலாம்...” னு அவனுக்குத் தோன்றதுக்கே ரெண்டு நாளு ஆயிப்போச்சு...
ஆனா... அதுக்கப்புறமாத்தான் அந்தப் பிரச்சனை வந்துருச்சு... “இதுநா வர, யாரும் அந்தமாறி சந்தேகம்னு ஒன்ன வாத்தியாருக்கிட்ட கேட்டதே இல்லயே... இப்ப நம்பமட்டும் போயி எப்புடிக் கேக்குறது...?” ன்னு ஒரு பயம் வந்துருச்சு அவனுக்கு. அந்தப் பயத்துலயே மேற்கொண்டு ரெண்டு நாளு ஓடிப்போச்சு. “சரி... சனியனத் தெரிஞ்சுக்காட்டித்தான் என்னா...?” ன்னும் லேசுல விட்டுற முடியல. தவியாத் தவிச்சுப் போயிட்டான் பய புள்ள.
கடசில, ஒருவழியா... தைரியத்த வரவச்சுக்கிட்டு, இப்புடி ஒரு வாரமா, தன்னோட நெஞ்சுல சொமந்த பாரத்த, பலவேசம் வாத்தியாருமேல எறக்கி வச்சுப்புட்டான் சின்னப்பாண்டி.
அவரு வாழ்நாள்ல இதுநாவர “அந்த வார்த்தைய” அவரு கேள்விப்பட்டதில்ல. அறிவுப் பசியில புறப்புட்ட அந்த ஆயுதத்தப் பாத்து அரண்டு போயிட்டாரு பலவேசம். காலங்காலமாக் கடைபுடிச்சுக்கிட்டு வந்த தன்னோட கல்விக் கொள்கைக்கி பங்கம் வந்ததக் கூட அவரால தாங்கிக்க முடியும், ஆனா, சின்னப்பாண்டி கேட்ட கேள்விக்கி, தனக்கு பதிலு தெரியலங்கிறதத்தான் அவரால தாங்கிக்க முடியல.
மொதப் பிரச்சனை என்னானாக்க, அவன் கேட்ட “அந்த வார்த்தை” தமிழா இல்ல ஆங்கிலமான்னு அவரால முடிவுகட்ட முடியல. ஆனா, உச்சரிப்ப வச்சுப் பாக்குறப்போ, அது ஏதோ ஒரு ஆங்கில வார்த்தைமாறிதான் இருந்துச்சு. “ஏ பார் ஆப்பிள்... பி பார் பால்...” ன்னு பழய பாடத்துலல்லாம் படிச்சுருக்காரு... ஆனா, இப்புடியாக்கொந்த ஒரு வார்த்தைய, அவரு எந்தப் புத்தகத்துலயும் படிச்சதா அவருக்கு ஞாவகம் இல்ல. “என்னாத்த சொல்றது...? எப்புடி சமாளிக்கிறது...” ன்னு யோசிச்சவரு, “ஒனக்கு எப்புர்றா தெரியும்...?” ன்னு ஆயுதத்த அவெம்மேலேயே லாவகமாத் திருப்பிவிட்டாரு.
“இல்ல சார்... எங்க சொந்தக்காரப் பையன்... டவுன்ல இங்கிலீசு மீடியம் படிக்கிறான் சார்... அவனோட பொதுஅறிவுக் களஞ்சியப் புத்தகத்துல போட்டுருந்துச்சு சார்... நம்ம சமூக அறிவியல் புத்தகத்துல கூட இருக்கும்னு சொன்னான் சார்... ஆனா, அப்புடி ஒன்னும் போடக் காணோமே... அதான் சார் கேட்டேன்....”
“ஓகோ... அப்படியா...?” அடுத்து என்ன சொல்றதுன்னு அவருக்கு ஒன்னும் பொலப்படல. அங்கதான் அவரோட அனுபவ அறிவு அவருக்குக் கை குடுத்துச்சு. “அப்ப அதுக்குப் பக்கத்துலேயே அது என்னான்னு படம் போட்டுருக்குமேடா...?” ன்னாரு.
“ம்ம்... ஆமா சார்... படம் போட்டுருந்துச்சு சார்... பாக்குறதுக்கு புசுவாணம் மாறி இருந்துச்சு சார்...” அவரோட அனுபவ அறிவுக்கும் ஆப்பு வக்கிறமாறி இருந்துச்சு அந்தப் பதிலு.
“புசுவாணம் மாதிரி இருந்துச்சா...? இதென்னாடா கொடுமை...? அதுக்கும் சமூக அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்...?” மண்டமூளை கொழம்பிப் போச்சு அவருக்கு. இதுக்கு மேல என்னாத்த சொல்றதுன்னு தெரியாம அவரு மருகி நிக்கிறதுக்கும், மத்தியானச் சோத்துக்கு மணியடிக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு.
“அப்பாடா... ஒரு வழியாத் தப்பிச்சோம்...” ன்னு நெனச்சவரு, “சரி... சரி... எல்லாரும் சாப்புடப் போங்கடா… அப்புறமாப் பாத்துக்கலாம்...” ன்னு அதிவேகமா வகுப்பக் கலைச்சு விட்டுட்டு, "அந்த வார்த்தை" க்கும் புசு வாணத்துக்குமுண்டான தொடர்பு என்னான்னு அதி தீவிரமாச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாரு.
மத்தியானச் சோறு ஒழுங்கா எறங்கல அவருக்கு.
அவரைச் சொல்லிக் குத்தமில்லை. அவரு வயசும் சூழலும் அப்புடி. அவரு காலத்துப் படிப்பு முறையும் அனுபவமும் அவருக்குக் கை குடுத்தது அம்புட்டுத்தான். பத்தாததுக்கு, மொத்தப் பள்ளியோட சிலுவயையும் ஒத்தையாளாத் தூக்கிச் சொமக்க வச்சுருச்சு அரசாங்கம். பாவம், பட்டிக்காட்டு வாத்தியாரு, அவரும் என்னதான் பண்ணுவாரு...? இன்னுங் கொஞ்சக் காலத்துக்கு ஒப்பேத்திட்டா போதும்னு இருந்துட்டாரு. அதான், அவர இந்த இக்கட்டுல கொண்டாந்து மாட்டி வுட்டுருச்சு.
மத்தியானச் சோத்துக்கப்புறமா, நெறைய வேலை இருக்காமாறிக் காட்டிக்கிட்டு, பாதிப் பசங்கள வெளாடச் சொல்லிப்புட்டு, மீதிப் பசங்கள, கரும்பலகைக்கெல்லாம் கரி பூசச் சொன்னாரு. ஊமத்த எலைகளயும் அடுப்புப் கரியையும் தண்ணி சேத்து, வண்டிமைய்யிப் பதத்துக்கு அரச்சு, கரும்பலகைக்கெல்லாம் பூசுனது போவ, மீதிய, அவிங்கவிங்க சிலேட்டுகளுக்கு, பசங்க அங்க பூசிக்கிட்டுருக்க, இங்க என்னாடானாக்க, ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்புக்குள்ள அம்புட்டுப் புத்தகங்களையும் அக்கு வேற ஆணி வேறயா அலசிக்கிட்டுருந்தாரு பலவேசம்.
ஒரு துப்பும் கெடைக்கல. அதுக்குமேல ஆராச்சியத் தொடர்ற வசதி அவரு மனசுலயும் இல்ல, கரட்டுப்பட்டிப் பள்ளிக்கூடத்துலயும் இல்ல. இப்புடி இருக்கப்ப, பள்ளிக்கூட சம்பந்தப்பட்ட வாரக்கடைசி வேலைக வேற, நெசமாவே பூதாகரமா அவரு முன்னாடி நிக்கவும், ஆராய்ச்சிய அந்தரத்துல விட்டுப்புட்டு, அந்த வேலைகள்ல முங்கிப் போனதுனால, மேற்படி “அந்த வார்த்தை” ய வகையா மறந்து போயிட்டாரு பலவேசம்.
பொழுசாய பள்ளிக்கூடத்த மூடிப்புட்டு, வீட்டுக்குக் கெளம்பவும் “அந்த வார்த்தை” திரும்பியும் வந்து மண்டைக்குள்ள பூந்துக்கிச்சு. மண்டமூளையைக் கசக்கிப் புழிஞ்சு பாத்ததுல, மேற்படி வார்த்தையப் பத்துன எந்தக் குறிப்பும் ஞாபகத்துக்கு வரல, ஆனா, வண்டிக்கி பெட்ரோல் போடணும்னு மட்டுந்தான் ஞாபகம் வந்துச்சு.
நேரா வீட்டுக்குப் போவாம, பெரியபட்டி பிரிவுல இருக்க பெட்ரோல் பங்க நோக்கிக் கெளம்புனாரு பலவேசம். அக்கம் பக்கத்து ஊருகளுக்கு பெரியபட்டி பிரிவுதான் பேருந்து நிறுத்தம். ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரெண்டு மூணு டீ கடை, ஒரு பலசரக்குக் கடை, ரெண்டு பெட்டிக் கடை, ஒரு நெல் அரவை மில்லுன்னு வரிசை கட்டி நிக்க, இந்தப் பக்கமா, ஒரு ஓட்டல் கடை, ரெண்டு சைக்கிள் கடை, ஒரு பெட்ரோலு பங்கு, ஒரு ஆட்டோ ஒர்க்சாப்புன்னு ஒரு குட்டி யாவார ஒலகமே அங்கனக்குள்ள இருந்துச்சு.
வெரசா வர்ற வண்டிக, கேரளாவுக்குக் கொண்டுபோவ அடச்சு வச்ச அடிமாடுக கணக்கா, கொண்டாந்து தள்ளுதுகைய்யா குட்டியும் குளுமானா இருக்க புள்ளைகள. பாவம், பள்ளிக்கூடம் போற வயசுல, பஞ்சு மில்லுக்கு வேலைக்குப் போயிட்டு வருதுக அம்புட்டும்.
அதுல, கரட்டுப்பட்டிப் புள்ளைக அஞ்சாறு, பலவேசம் வாத்தியாரு எதுக்க வர்றதப் பாத்துப்புட்டு, மொகமலந்து போயி, “வணக்கம் சார்...” ன்னு சல்யூட் வக்கிதுக. வழக்கமா சிரிச்சுக்கிட்டே பதிலு வணக்கம் வக்கிறவரு, அன்னைக்கி இருந்த நெலமையில, வணக்கத்துக்கு அறிகுறியா, மண்டைய மட்டும் ஆட்டிப்புட்டு, நேரா பெட்ரோலு பங்குக்குள்ள வண்டிய விட்டாரு.
பெட்ரோலு போட்டுட்டு திரும்பையில, பக்கத்து ஒர்க்சாப்பு பேர்ப்பலகை, அவரு கவனத்த சுண்டியிழுத்து, அவரு மூளைக்குள்ள மின்சாரத்தப் பாய்ச்சுது. “எதைத் தின்னா பித்தம் தெளியும்...” ன்னு இருந்தவருக்கு, “இங்கு ****** செய்து தரப்படும்...” ங்கிற வாசகம் ஏதோ ஒன்ன சூசகமா மின்னலடுச்சுக் காட்டுது.
ஒர்க்சாப்பை உத்துப் பாத்தாரு பலவேசம். நூலுல நெஞ்சதா... இல்ல குருடாயில்ல செஞ்சதான்னு தெரியாத அளவுல, சட்டை போட்டுருந்த மெக்கானிக்கு ஆளுக, புசுவாணத்துலருந்து செதர்ற மத்தாப்பு கணக்கா, தீயும் பொகையும் சீறிப் பாயுற கொழாயக் கைல புடுச்சுக்கிட்டு, பெருசு பெருசான டயருகளக் கீழ போட்டு, ஏதோ வேல செஞ்சுக்கிட்டு இருந்தாக.
வேட்டைக் கண்ணியில ஏதோ சிக்கிறவும், அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க தவதாயப் படுற வேட்டக்காரன் மாறி பரபரத்தாரு பலவேசம். பலகைல பாத்த அந்த வார்த்தையும் தான் பாத்த காட்சியும், “ஏன் நம்பளுக்குள்ள இவ்ளோ கெளர்ச்சிய உண்டுபண்ணுச்சு...” ங்கிறத, சீக்கிரமே அவரு மண்டமூளை தெரிஞ்சுக்கிச்சு.
புசுவாணம் – மத்தாப்பு – “அந்த வார்த்தை” எல்லாத்தையும் அதிவேகமாக் கோத்துப் பாத்து, “ஆகா... நம்ப தேடிக்கிட்டுருக்க அந்த வார்த்தைக்கும், இங்க பாத்த இந்த வார்த்தைக்கும் எதுனா ஒட்டுறவு இருக்குமோ...? இருந்தாலும் இருக்கலாம்... யார் கண்டது...?” ன்னு ஒருகணம் சந்தோசப் பட்ட அவரு மனசு, “ச்சேச்சே... இது என்ன முட்டாள்த்தனம்...? ஏன் இப்புடீலாம் யோசிக்கத் தோணுது...?” ன்னு அவரு மண்டையிலே கொட்டுச்சு.
அவருக்கே ஒன்னும் புரியல. கொஞ்சம் வெக்கமாக் கூட இருந்துச்சு. இருந்தாலும், என்ன ஏதுன்னு தெருஞ்சுக்கிற ஆவல் அவரப் புடிச்சுத் தள்ள, “இருக்கட்டும்... இருக்கட்டும்... அதையுந்தான் பாத்துறலாம்...” ன்னு நேரா ஒர்க்சாப்புக்குள்ள வண்டிய விட்டாரு பலவேசம்.
குடைச்சல் தொடரும்...