சனி, 22 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 7

விடிய்ய... பேரப்புள்ள சகிதமா மக வீட்டுலேர்ந்து வந்துட்டாக. அவுகளப் பாத்ததும் தன்னோட பிரச்சனைகள மறந்து அவுகளோட அளாவளாவி குதுகலாமா இருந்தாரு பலவேசம்.

கொஞ்ச நேரந்தான்... அதுக்கு மேல அவரால முடியல... அடிக்கடி “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ளார வந்து கொடைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.


அன்னைக்கிப் பூராம் இப்புடித்தான் மந்திரிச்சு விட்ட கோழி கணக்கா இருந்தாரு பலவேசம்.

“என்னம்மா ஆச்சு அப்பாவுக்கு... ஒரு மாதிரியாவே இருக்காரு... ஒடம்பு கிடம்பு சரியில்லையா என்ன...?” ன்னு அவரு மக விசாரிக்கிற அளவுக்கு ஆயிப்போச்சு.

“அடி.. அத ஏண்டி கேக்குற...? நேத்து பொழுசாய பள்ளிக்கூடத்துலருந்து வந்ததுலருந்தே இப்புடித்தான் இருக்காரு... நம்ப பண்ணையாளு பெரியசாமி விட்டுட்டுப் போறத நெனச்சு மருகிக்கிட்டு கெடக்குறாரு போல... பாவம்... ரொம்பக் காலமா நம்ப காலடிய நத்திக்கிட்டு இருந்த மனுசன், இப்பத் திடீர்னு போறேன்னு சொல்லவும் ரொம்ப மனசொடஞ்சு போயிட்டாருன்னு நெனைக்கிறேன்... நீ ஏதும் கேட்டுக் கீட்டு வச்சுராத... என்ன...?” ன்னு பதிலச் சொல்லிப்புட்டு அடுப்பப் பாக்கப் போயிருச்சு அந்தம்மா.

“அடுத்து என்ன செய்யிறது...” ன்னு ஒரே யோசனையில இருந்தாரு பலவேசம். எப்பயும் அக்கா வீட்டோட வர்ற அவரோட மகங்காரன், அன்னைக்கின்னு பாத்து, ஏதோ வேற வேல இருக்குன்னு மட்டம் போட்டுட்டான். ஒரு வேளை அவன் வந்திருந்தா, அவங்கிட்ட கம்ப்யூட்டர் கிளாசு பத்திப் பேச்சுக் குடுத்து, எப்புடியாவது இந்த விசயத்த நாசூக்காக் கேட்டுப் பாக்கலாம்னு நெனச்சு வச்சுருந்தாரு. அதுக்கும் வழியில்லாமப் போச்சு.

தீராத மனக் கொழப்பத்துல இருந்தவரு, சனிக்கெழமை ராவும், மொட்ட மாடில படுத்து இருட்டப் பாத்து மொறச்சுக்கிட்டுருந்தாரு.

அவரோட மனக்குமுறல எட்டிப்பாத்துக்கிட்டுருந்த நட்சத்திரங்க சொன்ன வாக்குமூலத்த பரிசீலிச்சோ என்னமோ, நாயித்துக்கெழமப் பொழுது அவரோட பிரச்சனைக்குண்டான ஒரு தீர்வோடையே விடிஞ்சிச்சு, அவரு பேரன் வடிவுல.

மத்தியானச் சாப்பாட்டுக்கு அப்பறமா, வீட்டுக்கு முன்னாடி இருக்க வேப்பமரத்தடில, ஊஞ்சல் கட்டி, பேரப் புள்ளையோட வெளாடிக்கிட்டு இருக்கப்ப, திரும்பியும் “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ளார பொகைய ஆரம்பிச்சுருச்சு.

“சரி... பேசாம... பேரங்கிட்ட கேட்டுப் பாத்துரலாமா...? ஆமா... அதாஞ்சரி... இதுல ஒன்னும் பெரிய மானக்கேடு வந்துராது... அப்புடியே வந்தாலுந்தான் என்ன...? எல்லாம் நம்ப பேரந்தான...” ன்னு ஒரு துணிவு வந்துச்சு. இந்தவாட்டி ரொம்ப நேர்த்தியா காயை நவத்துனாரு பலவேசம். அவரோட அனுபவ அறிவ மட்டும் தொணைக்கி வச்சுக்கிட்டு அஞ்சாப்பு படிக்கிற பேரன மடக்குனாரு.

ஊஞ்சல்ல பேரன ஆட்டிவிட்டுக்கிட்டே... “தாத்தா ஒரு கேள்வி கேப்பனாம்... நீ அதுக்குப் பதில் சொல்லுவியாம்...”

“சரி... கேளுங்க தாத்தா...”

“நீ இங்கிலீஷ் மீடியம்லாம் படிக்கிறல்ல...? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு பாப்பம்...?”

“என்ன கேள்வி?”

வல்கோனான்னா என்ன?”

“வல்கோனாவா? அப்புடீன்னு ஒன்னு இருக்கா என்ன...?”

“ஏய்... நல்லா யோசிச்சுப் பார்றா... ஒன்னோட பாடப் புத்தகத்துல கூட வருமே...?”

“ம்ம்ம்...” பலமா யோசிச்சான் பய. பலவேசத்துக்கு நெருப்பு மேல நிக்கிற மாறி இருந்துச்சு. “தெரியாதுன்னு சொல்லிருவானோ...? அப்புடிச் சொல்லிட்டா என்ன செய்யிறது...? எப்புடியாவுது சரியான பதிலச் சொல்லிட்டான்னாக்க நல்லாருக்கும்...” ன்னு அடிச்சுக்கிச்சு மனசு.

“ம்... தாத்தா... வல்கனோன்னு  தான் நான் படிச்சிருக்கேன்... நீங்க கேக்கிற மாதிரி வல்கோனான்னு ஒன்னும் இல்லையே... ஒரு வேளை... நீங்க வல்கனோவைத்தான் அப்புடிக் கேக்குறீங்களோ...?” வெவரமா ஒரு பதிலு கேள்வியப் போட்டான் பய.

“ஆகா... ஒரு வேளை வல்கனோவைத்தான் சின்னப்பாண்டி வல்கோனான்னு கேட்ருப்பானோ...?” கொழம்பிப் போயிட்டாரு பலவேசம்.

“பேரஞ் சொல்றத வச்சுப் பாக்குறப்போ... புத்தகத்துல போட்ருக்றது சரியாத்தான் இருக்கும்... பையந்தான் தப்பாக் கேட்ருக்கணும்...” ங்கிற அனுமானத்துக்கு வந்தாரு.

இம்புட்டுத் தூரம் தான் தேடிக்கிட்ருந்த அந்த வார்த்தையும் புத்தகத்துல இருக்க இந்த வார்த்தையும் ஒன்னாத்தான் இருக்கணும்ன்னு அவரோட உள்மனசு சொல்லுச்சு.

“எப்புடியோ புத்தகத்துல அந்த வல்கோனா இருக்குங்கிற வரைக்கும் கண்டு புடிச்சாச்சு...இனிமே வல்கனோன்னா என்னான்னு கண்டுபிடிச்சாவனும்...” ன்னு நெனச்சுக்கிட்டே, “ம்... ஆமாடா... அதத்தான் கேட்டேன்...” னாரு ரொம்ப ஆவலா...

“என்ன தாத்தா... கேள்வியே ஒழுங்காக் கேக்கத் தெரியலை உங்களுக்கு...?” ன்னு எளக்காரமா சிரிச்சான் பேரன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்டா... ஒனக்குத் தெரியுமான்னு தான் கேட்டேன்...” விடாக்கண்டன் மாறி வெனயமாக் கேட்டாரு தத்தா.

“அதான் ஒங்களுக்குத் தெரியும்ல...? அப்பறம் ஏன் எங்கிட்டே கேக்குறீங்க...?”  கொடாக்கண்டன் மாறி கொக்கியப் போட்டான் பேரன்.

“அடடா...மொதலுக்கே மோசமாயிருச்சே...? என்னடா இது...? இவ்ளோ தூரம் வந்தாச்சு... இப்ப வந்து மொரண்டு புடிக்கிறானே...?” ன்னு பதறிப்போனாரு பலவேசம்.

தன்னோட முயற்சியில கிஞ்சித்தும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாறி, “பரவால்லடா. நீ எப்புடிப் படிக்கிறேன்னு தாத்தா தெரிஞ்சிக்க வேணாமா...? அதான் கேட்டேன்... எங்கே சொல்லு பாப்போம்...?” ன்னு  பக்குவமாத் தூண்டியப் போட்டாரு...

“வல்கனோன்னா... எரிமலை... தாத்தா...” ன்னு பெருமிதமா சொன்ன பேரன், அந்த வார்த்தையைப் பத்துன ஒரு சிறு குறிப்பையே அவருக்கிட்ட வரைஞ்சுபுட்டான்.

கடசீல மீனு சிக்கிருச்சுனே நம்பிட்டாரு பலவேசம். தமிழ்வழி சமூக அறிவியல்ல எரிமலையப் பத்துன பாடம் இருக்கிறதையும், பேரப் புள்ள சொன்ன பதிலோட அது ஒத்துப் போறதையும் வச்சு, தன்னோட கேள்விக்கி பதிலு இதாத்தான் இருக்குங்கிற முடிவுக்கு வந்து, “ப்பூ... இம்புட்டுத்தானா விசயம்...? இது தெரியாமத்தான் நாம இவ்ளோ சிரமப்பட்டமா...?” ன்னு தன்னத்தானே நொந்துக்கிட்டாரு.

உண்மைலேயே, “வல்கனோ” (எரிமலை) ங்கிறதத்தான் சின்னப்பாண்டி அவருக்கிட்ட கேள்வியாக் கேட்டுருக்கான். பாவம், அவன் அறிவோட நீள அகலம்லாம் “கல்கோனா” முட்டாயி வரைக்குந்தான் பரந்து விரிஞ்சுருக்கு. அதுனாலதான் “வல்கனோ” ங்கிற வார்த்தை அவனுக்கு “வல்கோனா” வாத் திரிஞ்சுபோச்சு.

இந்த வெவகாரம் தெரியாத பலவேசம், மேற்படி “வல்கோனா” வத் தேடி வலைய வீசியிருக்காரு பாவம். “எரிமலை” ங்கிற தமிழ்ப்பதம் அவருக்குத் தெரியும். ஆனா, அதுகுக்குண்டான ஆங்கிலப் பதந்தான் அவருக்குத் தெரிஞ்சிருக்கல. அதுனாலதான் இத்தனை கூத்தும் கொழப்பமும்.

“காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ச...” ங்கிற மாறி, ஆட்டோ ஒர்க்சாப்பு பேர்ப்பலகையில “இங்கு வல்கனைசிங் செய்து தரப்படும்...” ன்னு போட்ருக்கிறதப் பாத்து அங்கலாம்  போயி விசரிச்சுருக்காரு.

“ச்சே... இதக் கண்டு பிடிக்கவா இவ்ளோ மெனக்கெட்டோம்? கேவலம் ஆட்டோ ஒர்க்சாப்புல போய்த்  தேடிப் பாத்துருக்கோமே...?” ன்னு நெனைக்கிறப்ப அவரோட அறியாமைய நெனச்சு வெக்கமா இருந்துச்சு அவருக்கு... அதே நேரம் அந்த வார்த்தைக்கி  “புசுவாண” த்தை ஒப்பாச் சொன்ன சின்னப்பாண்டிய நெனச்சா சிரிப்பாவும் இருந்துச்சு.

“ஏதோ இந்தளவுக்குப் பரவால்ல... பொண்டாடிக்கிட்டயோ... மகங்கிட்டயோ... இல்ல ஆட்டோ ஒர்க்சாப்புக்  காரங்கிட்டயோ... போவ இருந்த மானத்தை... நம்ம பேரப்புள்ள காப்பாத்திப்புட்டான்...” ன்னு நிம்மதிப் பெருமூச்சு விட்டாரு.

மனச அரிச்சுக்கிட்டுருந்த கேள்விக்கு வெடை கெடைச்ச சந்தோசத்துல அப்புடியே பேரனைத் தூக்கி, உச்சிமோந்து, ஆனந்தக் கூத்தாடுனாரு பலவேசம்.

“நம்ப சரியாப் பதிலு சொன்னதுனாலதான் தாத்தா நம்பளக் கொண்டாடுறாரு...” ன்னு நெனச்சு பூரிச்சுப் போயிட்டான் பேரன்.

தன்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராம, விசயத்தக் கண்டுபுடிச்ச தன்னோட தெறமைய நெனச்சுத் தனக்குதானே ஒரு பக்கம் மெச்சிக்கிட்டாலும், “ஏதோ பேரனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறதுனால அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சு இருக்கு... அந்த மாறி ஒரு வசதி வாய்ப்பு, பாவம் பட்டிக்காட்டுப் பசங்களுக்கு இல்லையே...? அவிங்களோட அறிவுப் பசியை எப்புடித் தீத்து வைக்கப்போறோமோ...?” ன்னு  நெனைக்கையில அவருக்கு நெஞ்சு கணத்துப்போச்சு.

எது எப்புடியோ... ஒருவழியா... வல்கோனாவை கண்டுபுடிச்ச சந்தோசம் அவரு மனசுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா எறங்கிக்கிட்டு இருக்க, “மொதல்ல இத சின்னப்பாண்டிக்கிட்ட சொல்லிரணும்...” ன்னு அவரு நெனச்ச அதே நேரம்...


இந்த வல்கோனாவை உண்மையிலேயே தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட சின்னப்பாண்டியோ... அவுக அப்பா அம்மா தலையில சொமக்குற பாரத்த... தன்னோட நெஞ்சுல சொமந்துக்கிட்டு... கொத்தடிம வேலை செய்ய... குடும்பத்தோட ஆந்திராவுக்கு வண்டி ஏறுறதுக்காண்டி... பெரியபட்டி பிரிவைப் பாத்து போய்க்கிட்டு இருக்கான்...!



பின் குறிப்பு:- "குடைச்சல் முற்றும்..." ன்னு இந்தச் சோக முடிவோட முடிச்சுக்கலாம்ன்னுதான் நான் ஏற்கனவே முடிவு பண்ணிருந்தேன்... ஆனா... இதையே தொடர்ந்து... "சின்னப்பாண்டியின்  கதி என்ன ஆனது...?" ங்கிறத,  ஒரு மகிழ்வான முடிவோட அடுத்த பதிவுல முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க...?


சனி, 15 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 6

ரும்பலகைகளுக்குக் கரி பூசச் சொன்ன வாத்தியாரு, எதோ புத்தகத்த பாத்துக்கிட்டு இருக்காரு. “நம்ம கேட்ட கேள்விக்கு பதிலு சொல்லுவாரா...? மாட்டாரா...?” ன்னு மருகிக் கெடந்தான் சின்னப்பாண்டி.

நேரம் ஆக ஆக அவனுக்கு இருப்புக் கொள்ளல. “பேசாம வாத்தியாருக்கிட்ட போயி திரும்பியும் கேக்கலாமா...?” ன்னு கூடத் தோனிச்சு. இருந்தாலும், பயமா இருக்குறதுனால கேக்காமயே விட்டுட்டான். பொழுசாய பள்ளிக்கூடமும் முடிஞ்சு போச்சு... வாத்தியாரும் ஒன்னுமே சொல்லாமப் போயிட்டாரு... இப்ப என்ன பண்றதுன்னே அவனுக்குத் தெரியல. ஒரு வேளை திங்கக்கெழம சொன்னாலும் சொல்லிருவாருன்னு மசனத் தேத்திக்கிட்டான் பய.


“நம்பளும் நமக்குத் தெரிஞ்ச வழியிலல்லாம் தேடிப் பாத்துட்டோம்... ம்ம்ம்... இப்ப என்ன பண்றது...?” ன்னு ஓடுது மண்டைக்குள்ளாற... அப்பத்தான்... அவனுக்கு ஒரு புது யோசனை தோனுச்சு. “நம்பளும் பேசாம அந்த பொது அறிவுக் களஞ்சியப் புத்தகத்த வாங்கிட்டா என்ன...? ஆமா... அதாஞ் சரி... வீட்டுக்குப் போனதும் மொத வேலையா... அப்பாகிட்ட சொல்லி அந்த புத்தகத்த வாங்கித் தரச்சொல்லிற வேண்டியதுதான்...” ன்னு வேகமா நடையக் கட்டினான் வீட்டப் பாத்து.

வீட்டு நெலவரம் வேறமாறி இருந்துச்சு. போன தடவ ஆரம்பிச்ச சண்ட, வேற வேற வடிவத்துல தெனந்தெனம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அவுக அப்பா குடிச்சுட்டு வந்து அவுக அம்மா கூட சண்ட இழுத்து அடிக்கிறதும், அவுக அம்மா மூக்கைச் சிந்திக்கிட்டு அழுவுறதும் வாடிக்கையாப் போச்சு.

அவுக அப்பா அம்மா ரொம்ப நல்லவுகதான். அவுங்க அம்மாவுக்கு, மூத்த புள்ளைக ரெண்டுந்தான் படிக்காமப் போச்சு, சின்னப்பாண்டியவாவது நல்லா படிக்க வச்சு பெரிய வேலைக்கி அனுப்பிறணும்ன்னு கொள்ள ஆச. சின்னப்பாண்டியோட பெரிய அக்காவக் கட்டிக் குடுத்துடுட்டாக. அண்ணங்காரன் அவுக அப்பாகூட வெவசாயக் கூலி வேலைக்கு போறான். அவுக அம்மா சின்ன வயசுல பஞ்சாலைக்கு வேலைக்குப் போனதுனால ஆசுமா வந்துருச்சு. அதுக்கு  அடிக்கடி ஒடம்பு சரியில்லாமப் போவும். அவுக அப்பாவும் அண்ணனும் சம்பாரிக்கிறத வச்சுத்தான் குடும்பம் ஓடுது.

முன்னமாறி மழை தண்ணி பேயாமப் போனதால, சுத்து வட்டாரத்துல வேவசாயமெல்லாம் ரொம்பக் கொறஞ்சு போச்சு. ஏதோ ஒன்னு ரெண்டு எடத்துல வேலை கெடைக்கும். சமயத்துல ஒன்னுமே கெடைக்காமக் கூடப் போயிரும்.  அந்த நேரத்துலதான் வீட்டுல சண்ட ரொம்ப வரும்.

“இக்கரைக்கு அக்கரை பச்சை...” ங்கிற கணக்கா, அவுக அப்பாவுக்கு, இங்க இருந்து கருமாயப்படுறதக் காட்டியும், பேசாம வெளியூருப் பக்கம் போயி, வேற எதுனா வேலையைப் பாத்துப் பொழச்சுக்கலாம்ன்னு மனசுல விழுந்துருச்சு. ஆனா, அவுக அம்மாவுக்கோ, கட்டமோ நட்டமோ, சொந்த ஊருலயே இருந்து பொழச்சுக்காட்டணும்னு இருக்கு.

இதுல ஆரம்பிச்ச சண்டை இன்னும் முடியிற வழியக் காணாம். அவுக வீட்டுக் கூரையில விழுந்த ஓட்டை கணக்கா பெருசாயிக்கிட்டேதான் போவுது.

இந்த லட்சணத்துலதான் நம்பாளு புதுசா புத்தகம் வாங்க நோங்குறாரு.

நேரா வீட்டுக்குப் போனவன், அவுக அப்பா புது ஆளுக ரெண்டு பேத்தோட அவுக வீட்டுக்கு முன்னாடி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதையும், வீட்டுக்குள்ளாற அவுக அம்மா அழுதுக்கிட்டு இருக்கிறதையும் பாத்தான். “ஏதேது... இன்னைக்கும் சண்டை வந்துருச்சு போல... இவுகளுக்கு வேற வேலையே இல்லையா...” ன்னு நெனச்சுக்கிட்டே தயங்கித்தயங்கி உள்ள போனான்.

அவுக அம்மாக்காரி அழுகையில லயிச்சு இருந்ததுனால, இவன அடிக்க மறந்துட்டா போல. நல்ல வேளை, பயபுள்ள அப்போதைக்கி அடிவாங்காமத் தப்புச்சுக்கிட்டான்.

இப்பப் போயி எதுனா கேட்டா... என்ன கெடைக்கும்னு அவன் அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதுனால, எப்புடியும் இவுக சண்ட ஓஞ்சுரும், அப்பப் பாத்து நம்ப விசயத்தக் கேட்டுப்புடணும்னு வெவரமா முடிவு பண்ணிட்டுத் திண்ணையில போயி ஒக்காந்தான்.

அவுக அப்பாவோட பேச்ச வச்சு, அது ஏதோ வெளியூரு வேலைக்கு ஆளு எடுக்கிற ஆளுககூட பேசிக்கிட்டு இருக்காருன்னு தெரிஞ்சது. அவனுக்கு ஒரு பக்கம் சந்தோசமா இருந்துச்சு. “ஒரு வேளை வெளியூருக்கு அப்பன் வேலைக்குப் போச்சுன்னா, வர்றப்ப நமக்கு புத்தகம் வாங்கியாரச் சொல்லலாம்...” ன்னு மனசு கணக்குப் போட்டுச்சு.

சின்னப்பாண்டிக்கி வெவரம் தெரிஞ்சு அவுக வீட்டுல அவனுக்கு புதுத் துணிமணியோ இல்ல நோட்டுப் புத்தகமோ வாங்கிக் குடுத்ததில்ல. எல்லாம் அரசாங்கம் குடுக்குற இலவச சீருடையும் புத்தகமுந்தான். மொத மொத, இப்பத்தான் இந்தப் புத்தகத்த அவன் புதுசா வாங்கியாரச் சொல்லப்போறான். அத நெனைக்கிறப்பவே அவனுக்கு உள்ளூர சந்தோசமா இருந்துச்சு. அந்த மப்புலையே வெளையாடப் போயிட்டான்.

ராத்திரி அவுக அம்மா வந்து அவனக் கஞ்சி குடிக்கக் கூப்புட்டுச்சு. இதாண்டா சமயம்னு, நம்பாளு கொக்கியப் போட்டான்.

“யம்மா... அப்பாக்கிட்ட சொல்லி எனக்கு ஒரு புதுப் புத்தகம் வாங்கியாரச் சொல்லும்மா...” ன்னு ஆரம்பிச்சது தான் தாமசம்... அவனுக்கு வழக்கமாக் கெடைக்க வேண்டியது கொஞ்சம் தாமதாமாக் கெடச்சது முதுகுல.

“இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு... ஒனக்கு புத்தகமா வேணும் புத்தகம்... எரும மாடே... இருக்கிற புத்தகத்த வச்சுக்கிட்டே இங்க படிக்கிற வழியக் காணோம்... இதுல ஒனக்கு எம்புட்டு ஏத்தமிருந்தா இப்புடிக் கேப்ப...” ன்னு பொரிஞ்சு தள்ளிட்டா ஆத்தாக்காரி.

“ஒங்கப்பங்காரன் என்னடானாக்க... இருக்க வீட்ட ஒத்திக்கி விட்டுட்டு... பரதேசம் போயிப் பொழைக்கலாம்னு கெடந்து குதிக்கிறான்... இதுல நீ வேறயா... ஒழுங்கு மரியாதையா ஊத்துறதக் குடுச்சுப்புட்டு படுத்துத் தூங்கு...” ன்னு வசைமாரி பொழுஞ்சுபுட்டா.

அடிய வாங்குனவனுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு... “அப்புடி என்ன பெருசா கேட்டுப்புட்டோம்... அதுக்கு இந்த சாத்து சாத்துராக...” ன்னு நெனச்சுக்கிட்டே... “எனக்கு சோறும் வேணாம் ஒன்னும் வேணாம்... புத்தகம் வாங்கிக் குடுத்தாத்தான் நா சாப்புடுவேன்...” ன்னு மொரண்டு புடிச்சான்.

எச்சா ரெண்டு அடியப் போட்டு... “சனியனே... எக்கேடோ கேட்டுப்போ...” ன்னு சொல்லிட்டு போயிட்டா அம்மாக்காரி. ரெண்டு வண்டிக் கல்லக் கொண்டாந்து முதுகுல கொட்டுனமாறி இருந்துச்சு... முதுகெல்லாம் எரியுது... மேவாக்குல ஒன்னு கீவாக்குல ஒன்னுன்னு, ரெண்டு கையையும் முதுகுப் பக்கமா வச்சுத் தேச்சுக்கிட்டு... ஓ...ன்னு... பெருங்கொரலெடுத்து அழுவ ஆரம்பிச்சுட்டான் பய...

எதிர்பாத்தது கெடைக்கலங்கிற ஏமாத்தம்... அடிபட்ட ரோசம்... அவமானம்... இயலாமை... கோவம்... ஆத்திரம்ன்னு... சினிமாப் படத்துல மாறுற கலரு கணக்கா அவனுக்குள்ள மாறி மாறி ஓடுது... அதுக்குத் தக்கன அழுவையும் ஏத்த ஏறக்கத்தோட ஒடியாறுது... கொஞ்ச நேரத்துல... வயிறெல்லாம் எக்கி... கேவிக் கேவி... அழுவ முத்திகிட்டு வருது... யாத்தாடி ஓங்கூட மாரடிக்க முடியாதுறா சாமின்னு... பொல பொலன்னு போட்டி போட்டுக்கிட்டு வெளியேறுதுக கண்ணுத்தண்ணியும் மூக்குச்சளியும்...
  
“நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...?” ன்னு ஊடால ஒரு நெனப்பு மின்னல் கணக்கா வந்து போவுது...

“இந்நேரம் இங்லீசு பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருக்கலாம்... நம்பளும் நல்ல துணிமணி, சூ, டைலாம்    போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவலாம்... அவனமாறியே பளபளன்னு புத்தகம் வாங்கிப் படிக்கலாம்... நல்ல சாப்பாடு கெடைக்கும்... அப்பா அம்மா நம்பள திட்டாம அடிக்காம இருப்பாக...” ன்னு நெனச்சுப் பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு...

“ம்ம்... நம்ப வீடும்தான் இருக்கே... எப்பப் பாத்தாலும் பிரச்சனை... அப்பாவுக்கும்  அம்மாவுக்கும் ஒரே சண்ட... அவுக சண்ட போட்டுக்கிறதுமில்லாம நம்பளையும் போட்டு அடிக்கிறாக... ஒரு நல்ல துணிமணி இருக்கா...? ஒழுங்கான சாப்பாடு இருக்கா...? ஒன்னும் இல்ல... இதேது பணக்கார வீட்டுல பொறந்து இருந்தா... எல்லாமே கெடச்சுருக்குமே...” ன்னு ஆதங்கமா இருந்துச்சு...

“அய்யோ... ஒரு வேளை... அப்புடிப் போயிப் பொறந்திருந்தா... அப்பறம் நம்ப அப்பா அம்மா, அண்ணன் அக்காலாம்  நமக்குக்  கெடச்சுருக்க மாட்டாகள்ல...” ன்னு மறு நெனப்பு வரவும்... மொத நெனப்பு காத்துப் போன பலூனு கணக்கா பொசுக்குன்னு போயிருச்சு.

“என்ன இருந்தாலும்... நம்ம அப்பா அம்மா அண்ணன் அக்கா மாறி வருமா... எல்லாரும் நல்லவுகதான்... என்ன... நம்ப படிப்புன்னு வர்றப்பத்தான் எல்லாரும் நம்பள ஒன்னும் கண்டுக்கிற மாட்டிக்கிறாக... நா பெருசா ஒன்னும் கேக்கலையே... ஒரு புத்தகந்தான கேக்குறேன்... அதுக்குப் போயி இப்புடி வைய்யிறாக... அடிக்கிறாக...” ன்னு நெனைக்கிறப்ப கேவிக் கேவி அழுவ வரவும்... கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு ஊத்துது.

“எல்லாம்... அந்தப் பயலால வந்த வெனை... சும்மா கெடக்குற சங்க ஊதிக் கெடுத்த மாறி... நம்பகிட்ட அவம் புத்தகத்தக் காட்டி... வம்ப இழுத்து விட்டுட்டுப் போயிட்டான்...” ன்னு ஒரு பக்கம் அந்த பையன் மேல கோவங்கோவமா வந்துச்சு...

இப்புடி ஆதங்கமும் ஏக்கமும் அவன் மனசப் போட்டு பெசஞ்சுகிட்டு கெடக்க... முனுக்கு முனுக்குன்னு எரியிற வெளக்க மொறச்சுப் பாத்துக்கிட்டே... மூலையில ஒக்காந்தி கேவிக் கேவி அழுதுக்கிட்டு இருந்தான் சின்னப்பாண்டி...

இத்தனை சோதனையும் வேதனையும் அவனோட அந்தத் தேடலையும் ஆவலையும் கூட்டுச்சே ஓழிய... அவனோட முயற்சியில பின்வாங்கத் தூண்டல... என்ன ஆனாலும் சரி... அதக் கண்டு பிடிக்காம விடுறது இல்லைன்னு... முன்ன விட ரொம்ப வைராக்கியந்தான் வந்துச்சு அவனுக்குள்ள...
 
எவ்ளோ நேரம் அப்புடி அழுதுக்கிட்டு இருந்தானோ தெரியல... அப்புடியே மூலையில சுருண்டு படுத்துட்டான்...

பசி ஒரு பக்கம்... மனப் பாரம் ஒரு பக்கம்ன்னு அவனப் போட்டு அழுத்த... தவிச்சுப் போயிட்டான் பயபுள்ள... எப்புடியும் நமக்கு ஒரு நல்ல வழி பொறக்குங்கிற நப்பாசையோட விசும்பிக்கிட்டே கெடந்தவன்... பாவம்... இத விட பெரிய இடி ஒன்னு அவந்தலமேல எறங்கப் போறது தெரியாம... அப்புடியே தூங்கிப் போயிட்டான்...




குடைச்சல கண்டு புட்சுருவாருபா அடுத்த பதிவுல...!  :-)


செவ்வாய், 11 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 5

ழக்கமான தேநீர் பலகார உபசரிப்புக்கு இடையில, அவரோட மண்டைக்குள்ளார விடாமக் கொடஞ்சுக்கிட்டு இருந்துச்சு மேற்படி “வார்த்தை”. சாஞ்சநாற்காலில மல்லாந்து, மோட்டுவளையவே மொறச்சுப் பாத்துக்கிட்டுக் கெடந்தாரு பலவேசம்.
 
“புத்தகத்தையும் தாண்டின பொது அறிவோட தேவை
அவரு மனசு உணர்ந்துச்சு.


பொது அறிவுங்கிறது எல்லாத்துக்கும் “பொது”, அதத் தானும் பங்கு போட்டுக்கிறது, தன்னோட கொள்கைக்கி விரோதம்னு நெனச்சுக்கிட்டு இருந்தாரு பலவேசம். அடுத்தவிங்க பொருளுக்கு என்னைக்குமே ஆசப்பட்டதில்ல அவரு. அவருக்குண்டான பொது அறிவாகப்பட்டது, உள்ளூரு தேநீர்க் கடையோட பழய நாளிதழ்கள் அளவுலதான் இருந்துச்சு. பண்ணையாளோட சேந்து, தன்னோட தோட்டத்துல வெவசாயம் பாக்குறதுதான் அவரோட ஆகச்சிறந்த பொழுதுபோக்கு. மத்தபடி, எப்பயாச்சும் கருப்பு வெள்ள படங்களப் பாக்குறதுக்கு மட்டுந்தான் தொலைக்காட்சிப் பொட்டி பக்கம் போவாரு.  அந்தவகையில, அதுல வர்ற செய்திக பக்கம் தலை வச்சும் படுத்தது கெடையாது. ஏன்னாக்க, யாரவது பொய்யி சொன்னா அவருக்கு அறவே புடிக்காது...  துசுட்டனக் கண்டா தூர வெலகிப் போயிருவாரு.

ஆழ்ந்த சிந்தனையில கெடந்தவர, “ஏங்க... நாளைக்கு மக வீட்லேருந்து வர்றாங்க. கொஞ்சம் மளிகைச் சாமான்கள் வாங்கணும்...” ங்கிற வீட்டுக்காரம்மாவோட சத்தம் சுயநினைவுக்குக் கொண்டு வந்துச்சு.

“தேர்ச்சி மதிப்பெண்ணை எட்டிப்புடிச்ச மாணாக்கன்” மாறி பிரகாசமானாரு பலவேசம்.

“ஆகா... அறிய வாய்ப்பு... ஒருவேளை வொர்க் சாப்பு ஓனர் வந்துருந்தா... அவன்கிட்ட ஒருவாட்டி கேட்டுப் பாத்துறலாமே..” ன்ற நப்பாசையில “சரி... சரி... சீட்டையும் பையையும் கொண்டா பெரியபட்டி பிரிவுல போயி வாங்கிட்டு வந்துர்றேன்”  ன்னாரு பரபரப்போட.

“அதுக்கு எதுக்கு அம்புட்டு தூரம் போவணும்...? நம்மூர் நாடார் கடைலயே வாங்குறது தான...? கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்யிக்கு அலைஞ்ச கதையால்ல இருக்கு...” ன்னு அலுத்துக்கிட்டே, அவரோட  நப்பாசையில நாலுபடி மண்ணள்ளிப் போட்ருச்சு அந்தம்மா.

“பட்ட கால்லே படும்... கெட்ட குடியே கெடும்..” ங்கிற மாறி, “என்ன முயற்சி பண்ணாலும் எதுனா ஒரு தடங்கலு வந்துக்கிட்டே இருக்கே...” ன்னு நெனச்சவருக்கு,  ஒரு புது வழியக் காட்டுச்சு வீட்டம்மா சொன்ன சொலவட.  “கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்யிக்கு ஏன் அலையனும்...? பேசாம அகராதி எடுத்துப் பாத்துரலாமே...?” ன்னு தோனவும், பரவசத்தோட துள்ளி எந்திருச்ச பலவேசம், பரபரன்னு ஓடுனாரு அலமாரியப் பாத்து.

“இப்ப நம்ம என்ன சொல்லிப்புட்டோம்னு இவரு இப்புடித் துள்ளிக் குதிச்சு ஓடுறாரு?” ன்னு மெரண்டு போயிருச்சு அந்தம்மா.

பல நிமிசப் போராட்டத்தோட முடிவுல, தூசி படிஞ்ச அகராதியும் கையுமாத் திண்ணையில போயி ஒக்காந்தாரு பலவேசம். அவரு படிக்கிற காலத்துல வாங்கினது அது. வந்த வேகத்துல “வாழாவெட்டியா”ப் போச்சு. பல வருசப் பிரிவுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கு “வாழ்க்கை” குடுக்கத் துணிஞ்சிருக்காரு.

“என்னாச்சு இந்த மனுசனுக்கு...?” ன்னு அவரப் பாத்த வீட்டுக்காரம்மாவுக்கு, கேணச் சிரிப்பு ஒன்ன பதிலாக் குடுத்துப்புட்டு, அகராதியோட ஒறவாடத் தயாரானாரு பலவேசம்.

“இப்ப கடைக்குப் போகப் போறீங்களா இல்லையா...?” ன்னு சத்தங் கொஞ்சந் தூக்கலா வந்துச்சு அங்கிட்டு இருந்து.

“என்ன அவசரம். மெதுவாப் போறேனே...?” ன்னு வீட்டுக்காரம்மாவக் கண்டுக்காம பதில் சொன்னாரு பலவேசம்.

தாஞ்சொன்ன வேலையச் செய்யாம, வேற என்னாத்தையோ செய்யத் துணிஞ்சவரோட அலட்சியத்த, கொஞ்சமும் எதிர்பாக்காத அந்தம்மா, “அவரோட மல்லுக்கட்ட நமக்கு நேரமில்ல...” ங்கிறத, அடுப்பங்கர ஞாவகப்படுத்த, “என்னமோ பண்ணித் தொலைங்க...” ன்னுட்டு, சண்டையத் தள்ளிவச்சுப்புட்டு அடுப்பப் பாக்கப் போயிருச்சு.

“முனைவர் பட்டம் பெற முனையும் மாணாக்கன்...” மாறி மளமளன்னு பக்கங்களைப் பிராண்டினாரு  பலவேசம். “அந்த வார்த்தை” யோட மொதல் எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைக இருக்க பக்கத்துக்கு  வந்தப்ப, விக்கலெடுத்துருச்சு அவரோட முயற்சிக்கு. “சரி இவ்ளோ தூரம் யோசிச்சோமே... அந்த வார்த்தைக்கு என்ன ஸ்பெல்லிங்ன்னு யோசிச்சோமா...?”

அடுத்த போராட்டத்துக்குத் தயாராயிட்டாரு அவரு.

தன்னோட “பட்டறிவு, பொது அறிவு, அனுபவ அறிவு, ஆறாவது அறிவு எழாவது அறிவு” ன்னு அம்புட்டையும் தொணைக்குச் சேத்துக்கிட்டு, ஒரு கைதேந்த சிற்பி கணக்கா, “அந்த வார்த்தை” க்குண்டான ஆங்கில எழுத்துக்களை யோசிச்சுக் கோர்த்தவரு, அது மறந்து போவாம இருக்க, பெஞ்சக் குச்சி எடுத்து ஒரு காயிதத்துல குறிச்சு வச்சுக்கிட்டாரு.

அடுத்தாப்புல, ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிக் கூட்டி, மொத மூனு எழுத்து வரை வார்த்தைக இருக்க பக்கத்துக்கு வந்துட்டாரு. அதுல ஆரம்பிக்கிற வார்த்தைக நெறைய இருந்துச்சு அகராதியில. வாயெல்லாம் பல்லா “ஆகா... இன்னும் கொஞ்சந்தான்...” ன்னு கூப்பாடு போட்டுச்சு மனசு.

நாலாவது எழுத்தயும் சேத்து அதுல ஆரம்பிக்கிற வார்த்தைக வரை வந்தவரு, சோதனைக்கு வந்த கல்வி அதிகாரியக் கண்டவரு மாறி அரண்டு போயிட்டாரு. “மாங்கு மாங்குன்னு படியேறிப் போனாக்க... அங்க... மாடியவே காணாமா...” ங்கிற கதையாப் போச்சு அவரு பொழப்பு. மிகச் சொற்பமே இருந்த அந்த வார்த்தைகள்ல, சரித்திரப் பிரசித்தி பெத்த “அந்த வார்த்தை” ய மட்டும் காணல. எதத் தேடுறதுன்னே தெரியாம... தேடு தேடுன்னு தேடுன்ன அவரோட தேடுதல் வேட்டை... கடைசில அவரப் பாத்தே பல்லிளிச்சுருச்சு.

ஏமாத்தத்தோட வலியத் தாங்க முடியல அவரால. துக்கம் தொண்டைய அடச்சுருச்சு.

தன்னோட பிரச்சனைய யாருக்கிட்ட சொல்றதுன்னே தெரியல. வீடுக்காரம்மாக்கிட்ட கேக்கலாம்னாக்க, அவளோ... படிக்காத பட்டிக்காடு. நமக்கே தெரியல, அவளுக்கு எங்க தெரியப் போவுது...? அப்புடியே கேட்டாலும், “இது கூடத் தெரியாமயா இவ்ளோ நாளா நீங்க வாத்தியார் வேல பாக்குறீங்க...?” ன்னு கேட்டுப்புட்டா பெருத்த அவமானமாப் போயிருமே...? சரி... கல்லூரியில படிக்கிற மகங்கிட்ட, கைபேசி வழியாக் கேக்கலாம்னா... அதுக்கு அவரோட தன்மானம் எடங்குடுக்கல. தேள் கொட்டுன திருடங்கணக்கா முழிச்சுக்கிட்டு இருந்தாரு பலவேசம்.

அதுக்கு மேலயும் வேலை செய்ய அவரு மூளை தயாரா இல்ல... ரொம்ப மனச்சோர்வா போச்சு... இருந்தாலும், “சரி... நம்ப பிரச்சனைய நம்மளேதான் தீத்துக்கணும்... இன்னோரு வாட்டி தேடிப்பாக்கலாமா...” ன்னு அவரு நெனச்சதுதான் தாம்சம்.

“அய்யா...” ன்னு கொரலு கேட்டுச்சு வெளில...

யார்றான்னு பாத்தாக்க... பண்ணையாளு பெரியசாமி வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாரு.

“வாங்கையா... உள்ள வாங்க...” ன்னு கூப்புட்டு திண்ணையில ஒக்கார வச்சாரு பலவேசம்.

அந்த வட்டாரத்துலையே வத்தாத கேணிகள்ல பலவேசம் தோட்டத்து கேணியும் ஒன்னு. நெல்லு, வாழைன்னு வெள்ளாம நடக்கும். ரெண்டு மூணு தலமொறையா பெரியசாமி குடும்பந்தான் பலவேசம் தோட்டத்துல பண்ணையம் பாத்துக்கிட்டு இருக்கு. முப்பது நாப்பது வருச ஒழைப்பு பெரியசாமிய அசர வக்கில, ஆனா அவரு சம்சாரத்தோட சாவு அவர அசரவச்சுருச்சு. மக வீட்டுக்குப் போயி கடைசி காலத்த ஓட்டிரலம்னு முடிவு பண்ணிட்டாரு.

கூலிக்கு ஆளு கெடைக்காத இந்த நாள்ல, பெரியசாமி போனதுக்கப்புறமா என்ன பண்ணப் போறோம்ன்னு நெனைக்கிறப்ப வெசனமாத்தான் இருந்துச்சு பலவேசதுக்கு. இருந்தாலும், பெரியசாமிக்கு செய்யவேண்டியதெல்லாம் அவரு கொறையில்லாமத்தான் செஞ்சு குடுத்தாரு.

ஊருக்குப் போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போலாம்ன்னு வந்துருக்காரு பெரியசாமி. அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதையச் செஞ்சு அவர நல்லபடியா அனுப்பி வச்சாரு பலவேசம். அன்னைக்கி இருந்த மன நெலமையில, அவருக்கு அழுவையே வந்துருச்சு. இவ்ளோ நாளா, வீட்டுல ஒரு ஆளா, ஒன்னு மண்ணா இருந்துட்டு, பெரியசாமி போறத நெனச்சா நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்துச்சு அவருக்கு.

ராச்சாப்பாட்டுக்கு அப்பறம், வழக்கத்துக்கு மாறா, மொட்ட மாடில பாயைப் போட்டு படுக்கப் போனாரு பலவேசம். “இவருக்கு நெசமாவே எதோ ஒன்னு ஆகிப்போச்சு...” ன்னு பயந்து போன வீட்டம்மா, “ஒரு வேளை... பெரியசாமி போறத நெனச்சு மனசொடஞ்சு போயிட்டாரு போல...” ன்னு நெனச்சு மனச தேத்திக்கிருச்சு.

தூக்கம் புடிக்காம வானத்த வெறிச்சுப் பாத்த்துக்கிட்டே, ரொம்ப நேரம் படுத்துக் கெடந்தாரு பலவேசம். அம்மாவாச ராத்திரி, கரும்பலகை வானத்துல ஓட்டைகளைப் போட்டு, அதுவழியா அவர எட்டிப் பாத்து, எகத்தாளமா சிரிச்சிக்கிட்டு இருதுச்சுக நட்சத்திரங்க. தனக்கு சொல்லிக்குடுத்த வாத்திமாரு மொதக்கொண்டு உள்ளூரு அரசியல்வாதிக வர, யார் யாரு மேலயோ கோவங்கோவமா வந்துச்சு அவருக்கு.

“நா என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்... எனக்கு சொல்லிக் குடுத்த படிப்பு அம்புட்டுத்தான்... அந்தக் காலத்துல அதுவே ரொம்ப அதிகம்... அப்புடி இருக்கப்ப... இப்ப பாடத்த இவ்ளோ மேம்பாடா வச்சது யாரு குத்தம்...? என்னோட தெறமை என்னான்னு தெரியாம யாரு இப்புடி வைக்க சொன்னது...?  சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்...? ஆப்பையில அறிவ அள்ளுறதுக்கு முன்னாடி அத சட்டிலல்ல போட்டுருக்கணும் இந்த சர்க்காரு...? இது சர்க்காரு குத்தமா...? இல்ல நம்ப குத்தமா...? வெள்ளைக்காரன் நம்பள விட்டுட்டுப் போனாலும் அவன் மொழி நம்மளப் புடிச்சு அமுக்கிக்கிட்டு கெடக்குதே...? தமிழ் நாட்டுல தமிழு மட்டும் தெரிஞ்சிக்கிட்டு இருக்கறது குத்தமா...?”

ஒன்னுமே புரியல அவருக்கு...

“ஆங்கில வழிக் கல்வியில “அந்த வார்த்தைய” வச்சவன்... ஏன் தமிழ்ல அத வைக்கல...?” சின்னப்பாண்டியோட கேள்வி ஞாயமாப் பட்டுச்சு அவருக்கு. “அவங் கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத்  தெரியலைன்னா... அப்ப நா என்ன முட்டாளா...? அப்புடி நா முட்டாளுன்னா... நா படிச்ச படிப்புக்கும்... இதுநா வர பாத்த வாத்தியார் வேலைக்கும் என்ன அர்த்தம்...? என்ன மருவாத...?”

கோடையிடி மின்னல் மாறி கவட்டை கவட்டையா வேரோடிச்சு கெள்விக... தன்னோட பிரச்சனைக்கும் இந்த கேள்விகளுக்கும் எதுனா ஒட்டு இருக்கான்னு தெரியாமையே, அவரோட சிந்தனை “அந்த வார்த்தை” க்கொசரம் குமுறிக்கிட்டு கெடந்துச்சு.

கரி பூசிக்கிட்ட கரும்பலகை மாறி கவுந்து கெடந்துச்சு ராத்திரி... எதுக்குமே வசப்படாத அவரு சிந்தனை கடைசில தூக்கத்துக்கு வசப்பட்டுருச்சு...

பலவேசத்தோட ராத்திரி இங்க இப்புடி இருக்க...அங்க என்னடானாக்க... சின்னப்பாண்டியோட ராத்திரி ஒரே ரணகளமா இருந்துச்சு...!



குடைச்சல் தொடரும்...



ஞாயிறு, 2 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 4

“என்ன சார் வண்டில எதுனா கோளாறா?”  ன்னு கேட்டுக்கிட்டே, கையில ஸ்பானரோட, அவருக்கிட்ட  வந்தான் “அழுக்குல புடிச்ச கொழுக்கட்டை” கணக்கா இருந்த ஒரு வருங்கால மெக்கானிக்கு.


“இல்லைப்பா...” ன்னு தடுமாறி நின்ன பலவேசம்,  அப்பறமா எதையோ நெனச்சவரு மாறி, “ஆமாம்பா... ஸ்டார்ட்டிங்  ட்ரபுள் குடுக்குதுப்பா... அதக் கொஞ்சம் என்னான்னு பாக்கணும்... ஓனர் இருக்காராப்பா...?” ன்னு விசாருச்சுக்கிட்டே, ஏக்கத்தோட கடை பேர்ப்பலகையை ஒருவாட்டி பாத்துக்கிட்டாரு.

“ஓனர் வெளில போயிருக்கார் சார்... இதுக்கெல்லாம் அவரு எதுக்கு சார்... நானே பாத்துருவேன் சார்... நீங்க இப்புடி ஒக்காருங்க சார்...” ன்னு படக்குன்னு உள்ளருந்து ஒரு இருக்கையை எடுத்துப்போட்டான் பையன்.


மந்திருச்சு விட்ட கோழி மாறி, தயங்கித் தயங்கி அதுல ஒக்காந்த பலவேசம், சுறுசுறுப்பா வேலை செய்யிற  பையனையே கொஞ்சநேரம் பாத்துக்கிட்டுருந்தாரு.


வண்டிக்கிட்ட குத்தவச்சு ஒக்காந்தவன், நேரா “ஸ்பார்க் பிளக்” இருக்க பக்கம் கையைவிட்டு, அத வெடுக்குன்னு புடுங்கி, உத்துப் பாத்துட்டு, “அடச்சுருக்கு சார்... தொடச்சுப்புட்டு கொஞ்சம் சொரண்டிப் போட்டா போதும் சார்...” ன்னு சொன்னவன், அவரோட பதிலுக்கு காத்திருக்காம, “ப்பூ... ப்பூ...” ன்னு அத ரெண்டு  ஊது ஊதி... ரெண்டு சொட்டு சீமெண்ணெய்ய அது மண்டையில விட்டு, திருப்புளிய வச்சு சரக் சரக்குன்னு தேச்சு... கந்தத் துணியில நல்லாத் தொடச்சு, “அவ்ளோதான் சார்... இனிமே ஒழுங்கா ஸ்டார்ட் ஆவும் சார்...” ன்னு பெருமையோட சொன்னான். அப்புடிச் சொன்னதோட நிக்காம, அத திரும்பவும் மாட்டிவிட்டு, ஒரே மிதியில வண்டிய ஸ்டார்ட் பண்ணியும் காட்டினான்.


“பையன் பரவாயில்லையே...” ன்னு நெனச்சுக்கிட்ட பலவேசம், “எவ்ளோப்பா ஆச்சு...?” ன்னாரு.


“நீங்க பாத்து குடுக்குறதக் குடுங்க சார்...”


ஒரு இருவது ரூவாய எடுத்து நீட்டுனாரு. அதப் பாத்து அரண்டு போன பொடியன், “இதுக்கு எதுக்கு சார் இவ்ளோ காசு...? அஞ்சு ரூவா போதும் சார்...” ன்னான் பவ்யமா.


“பரவால்ல வச்சுக்கப்பா...” ன்னு அவன் கையில அழுத்தித் திணிச்சுப்புட்டு...  ஒரு நொடி தயங்கி நின்னாரு பலவேசம்.


ரொம்ப நன்றியுணர்ச்சியோட “என்ன சார்...?” ன்னான் பையன்.


“கேக்கலாமா...? இல்ல... வேண்டாமா...?” ன்னு ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்துக்கிட்டு இருந்துச்சு அவரு மனசுல. “சரி இவ்ளோ தூரம் வந்துட்டோம்... கேட்டுத்தான் பாப்பமே...” ன்னு ஒரு பக்கம் தோனுது, “ச்சே... ச்சே... இதப் போயி.... இந்தச் சின்னப் பையங்கிட்ட கேக்குறதா...?” ன்னு இன்னோரு பக்கம் தோனுது. பாவம்... தவதாயப்பட்டுப் போயிட்டாரு பலவேசம்.


முடிவுல, அவரோட தன்மானம், அதிக ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெறவும், “சரி... இன்னங் கொஞ்சநேரம் இருந்து பாப்போம்... ஒரு வேளை ஓனரு வந்துட்டா... அவருகிட்டே கேட்டுப் பாத்துரலாம்...” ன்னு ஒரு முடிவு கட்டுனாரு... அது ஏன்னாக்க... அந்தக் கடையோட ஓனரு, ஒரு காலத்துல  இவருக்கிட்ட படிச்சவன். அதுனால, அவங்கிட்ட கொஞ்சம் தயக்கமில்லாம நைச்சியமாப் பேசித் தெரிஞ்சுக்கலாம்ன்னு ஒரு கணக்குத்தான்.


“சரி... அதுவர என்னா பண்றது...? பையன் வேற சீக்கிரமா வேலைய முடிச்சுப்புட்டான்... இப்ப என்னா செய்யலாம்...?” ன்னு தீவிரமா யோசிச்சவரு...


“ஏம்பா... வண்டி இப்ப ஸ்டார்ட் ஆவுது... ஆனா கொஞ்ச நேரத்துல நின்னு போயிரும்ப்பா... நீ என்னா பண்ற... ஒரு வாட்டி ஓட்டிப் பாத்துட்டு வந்துறேன்...” ன்னாரு.


“அப்புடியா சார்... ஒகே சார்... ஓட்டிப் பாத்துட்டு வந்துர்றேன் சார்... அதுவரைக்கும், டீ காப்பி எதுனா குடிக்கிறீங்களா சார்...” ன்னு மரியாதையாக் கேட்டான் பையன்.


“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா... நீ போயிட்டு வாப்பா... நா வெயிட் பண்றேன்...” ன்னு அவருசொல்லவும்... சுறு சுறுப்பா வண்டிய எடுத்துக்கிட்டு வெளில போனான் பையன்.


அவன் போறதையே வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருந்த பலவேசத்தோட மனசு, இப்போ... அவன் பின்னாடியே  போச்சு... “வண்டி ஒயரம் தான் இருக்கான் பையன்... படிச்சா இப்ப ஒரு ஏழாவது எட்டாவது படிக்கணும்... பாவம்... இந்த வயசுல இப்புடிச் சிரமப்படுறான்... இப்புடிப் பிஞ்சுகள வேலைக்கு அனுப்பித்தான் அவனப் பெத்தவுக வயிறு வளக்கணுமா என்ன...?” ன்னு ஒரு கணம் கொதிச்சுப் போச்சு.

“பாவம்... பெத்தவிங்களுக்கு என்ன பிரச்சனையோ...? என்ன சூழ்நிலையோ என்னமோ...? சோத்துக்கே வழியில்லாம இருக்கப்போ... புள்ளைகள எங்கிட்டு படிக்கவைக்கப் போறாக... என்னதான் இருந்தாலும்... படிக்கிற வயசுல புள்ளைகள வேலைக்கு அனுப்புறது தப்புத்தான்... இதுக்கு இந்த ஊரும் ஒலகமும்தான் காரணம்...” ன்னு நெனச்சவரோட ஆதங்கம், கோவமா மாறி இந்த சமுதாயத்துமேலயும்,   பாழாப்போன அரசியல்வாதிகமேலயும் அரசாங்கத்துமேலயும் திரும்புச்சு...

நல்லவேளை அவரோட அந்தக் கோவம் அவிங்களக் குத்திக் கொதறத்துக்குள்ள... அவரோட கவனம், ஒர்க்சாப்புக்குள்ள வேல செஞ்சிக்கிட்டு இருந்த ஆளுக மேல போச்சு... அவுகளையும் அவுக  கையில வச்சு வேலை பாத்துக்கிட்டு இருந்த மத்தாப்புக் கொழாயையும் பாக்கவும், திரும்பியும் “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ள பகுமானமா வந்து ஒக்காந்திக்கிச்சு.

“சரி... அவுககிட்டே கேட்டுத் தெருஞ்சுக்கலாமா...” ன்னு ஒரு யோசனை வந்துச்சு அவருக்கு. ஆனா அதுக்கு அவரோட தன்மானம் எடம் குடுக்கல. “என்னடா... இதுகூடத் தெரியாமையா இவரு வாத்தியாரு வேலை பாக்குறாருன்னு அவுக நெனச்சுப்புட்டா, நம்ம மானம் என்னா ஆவுறது...?” ன்னு ஒரு பயம் வந்துருச்சு...


“சரி... பாவம்... வேலை செய்யிரவுகளத் தொந்திரவு செய்ய வேண்டாம்... ஓனரு வந்துரட்டும்... அவருக்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்...” ன்னு அவரு முடிவு பண்ணறதுக்கும், சோதனை ஓட்டம் போட்டுட்டு பையன் திரும்பி வர்றதுக்கும் சரியா இருந்துச்சு.

அவரோட கெட்ட நேரமோ என்னமோ... கடையோட ஓனரு அதுவரைக்கும் வரவே இல்ல. ஏமாத்தமாப் போச்சு அவருக்கு.

“சார்... வண்டில ஒரு பிரச்சனையும் இல்ல சார்... ஒழுங்காத்தான் ஓடுது சார்... நீங்க தைரியமா எடுத்துக்கிட்டு போலாம் சார்...” ன்னான் பையன்.


வேற வழியில்லாம... “சரி... இதுக்கு மேல இங்க இருக்குறதுல அர்த்தமில்ல... பையன் கொஞ்சம் வெவரமாத்தான் இருக்கான்... பேசாம இந்தப் பையங்கிட்டயே கேட்டுப் பாத்துறலாமே..” ன்னு ஒரு நெனப்பு வர, கடசீல... வெக்கத்தை தூக்கி வெளியில வச்சுப்புட்டு... அவங்கிட்ட வாய விட்டு கேட்டேபுட்டார் பலவேசம்...

“ஏப்பா... இந்த போர்ட்ல போட்டுருக்கே... ******ன்னு... அப்புடீனா என்னப்பா அர்த்தம்...?”


எதிர்பாக்காத அந்தக் கேள்வில அரண்டுபோன பையன், ஏதோ போலிசு விசாரணைக்கி ஆளான கைதி மாறி...


“எனக்கு அதெல்லாம் தெரியாது சார்... பஞ்சர் ஓட்டுவேன்... சின்ன சின்ன ரிப்பேர் பாப்பேன்... அவ்ளோதான் சார் தெரியும் எனக்கு ... நா வேலைக்குப் புதுசு சார்... நீங்க வேணா ஓனர்கிட்ட கேட்டுக்கங்க சார்... இப்ப வந்துருவார் சார்...” ன்னு மூச்சுவிடாம ஒப்புச்சான்.

இதக் கொஞ்சமும் எதிர்பாக்காத பலவேசமும், கொஞ்சம் மெரண்டுதான் போயிட்டாரு.


“சரி... சரி... பரவால்லப்பா... நான் ஓனர்கிட்டேயே கேட்டுக்கிறேன்... நான் வர்றேம்ப்பா...” ன்னு சொல்லிட்டு ஏமாத்தத்தோட கெளம்புனவர... ஏற எறங்கப் பாத்து... சல்யூட் அடிச்சான் பையன்.


“வாத்தியாரா இருக்க நமக்கே தெரியலை... வறுமைக் கொடுமைல, சின்ன வயசுலேயே வேலைக்கு வந்த, அவனுக்கு எப்புடித் தெரிஞ்சிருக்கும்...? பாவம்... அவங்கிட்ட நம்ப எதிர்பாக்குறதுல என்ன ஞாயம் இருக்கு...?” ன்னு நொந்துக்கிட்டே வண்டிய எடுத்தாரு பலவேசம்.


ஏமாத்தமும், அனுதாபமும் கலந்த ஆற்றாமையோட தாக்கம், அவரு வண்டி ஓட்டத்துல தெரிஞ்சுச்சு.




குடைச்சல் தொடரும்...



Related Posts Plugin for WordPress, Blogger...