விடிய்ய... பேரப்புள்ள சகிதமா மக வீட்டுலேர்ந்து வந்துட்டாக. அவுகளப் பாத்ததும் தன்னோட பிரச்சனைகள மறந்து அவுகளோட அளாவளாவி குதுகலாமா இருந்தாரு பலவேசம்.
கொஞ்ச நேரந்தான்... அதுக்கு மேல அவரால முடியல... அடிக்கடி “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ளார வந்து கொடைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
“என்னம்மா ஆச்சு அப்பாவுக்கு... ஒரு மாதிரியாவே இருக்காரு... ஒடம்பு கிடம்பு சரியில்லையா என்ன...?” ன்னு அவரு மக விசாரிக்கிற அளவுக்கு ஆயிப்போச்சு.
“அடி.. அத ஏண்டி கேக்குற...? நேத்து பொழுசாய பள்ளிக்கூடத்துலருந்து வந்ததுலருந்தே இப்புடித்தான் இருக்காரு... நம்ப பண்ணையாளு பெரியசாமி விட்டுட்டுப் போறத நெனச்சு மருகிக்கிட்டு கெடக்குறாரு போல... பாவம்... ரொம்பக் காலமா நம்ப காலடிய நத்திக்கிட்டு இருந்த மனுசன், இப்பத் திடீர்னு போறேன்னு சொல்லவும் ரொம்ப மனசொடஞ்சு போயிட்டாருன்னு நெனைக்கிறேன்... நீ ஏதும் கேட்டுக் கீட்டு வச்சுராத... என்ன...?” ன்னு பதிலச் சொல்லிப்புட்டு அடுப்பப் பாக்கப் போயிருச்சு அந்தம்மா.
“அடுத்து என்ன செய்யிறது...” ன்னு ஒரே யோசனையில இருந்தாரு பலவேசம். எப்பயும் அக்கா வீட்டோட வர்ற அவரோட மகங்காரன், அன்னைக்கின்னு பாத்து, ஏதோ வேற வேல இருக்குன்னு மட்டம் போட்டுட்டான். ஒரு வேளை அவன் வந்திருந்தா, அவங்கிட்ட கம்ப்யூட்டர் கிளாசு பத்திப் பேச்சுக் குடுத்து, எப்புடியாவது இந்த விசயத்த நாசூக்காக் கேட்டுப் பாக்கலாம்னு நெனச்சு வச்சுருந்தாரு. அதுக்கும் வழியில்லாமப் போச்சு.
தீராத மனக் கொழப்பத்துல இருந்தவரு, சனிக்கெழமை ராவும், மொட்ட மாடில படுத்து இருட்டப் பாத்து மொறச்சுக்கிட்டுருந்தாரு.
அவரோட மனக்குமுறல எட்டிப்பாத்துக்கிட்டுருந்த நட்சத்திரங்க சொன்ன வாக்குமூலத்த பரிசீலிச்சோ என்னமோ, நாயித்துக்கெழமப் பொழுது அவரோட பிரச்சனைக்குண்டான ஒரு தீர்வோடையே விடிஞ்சிச்சு, அவரு பேரன் வடிவுல.
மத்தியானச் சாப்பாட்டுக்கு அப்பறமா, வீட்டுக்கு முன்னாடி இருக்க வேப்பமரத்தடில, ஊஞ்சல் கட்டி, பேரப் புள்ளையோட வெளாடிக்கிட்டு இருக்கப்ப, திரும்பியும் “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ளார பொகைய ஆரம்பிச்சுருச்சு.
“சரி... பேசாம... பேரங்கிட்ட கேட்டுப் பாத்துரலாமா...? ஆமா... அதாஞ்சரி... இதுல ஒன்னும் பெரிய மானக்கேடு வந்துராது... அப்புடியே வந்தாலுந்தான் என்ன...? எல்லாம் நம்ப பேரந்தான...” ன்னு ஒரு துணிவு வந்துச்சு. இந்தவாட்டி ரொம்ப நேர்த்தியா காயை நவத்துனாரு பலவேசம். அவரோட அனுபவ அறிவ மட்டும் தொணைக்கி வச்சுக்கிட்டு அஞ்சாப்பு படிக்கிற பேரன மடக்குனாரு.
ஊஞ்சல்ல பேரன ஆட்டிவிட்டுக்கிட்டே... “தாத்தா ஒரு கேள்வி கேப்பனாம்... நீ அதுக்குப் பதில் சொல்லுவியாம்...”
“சரி... கேளுங்க தாத்தா...”
“நீ இங்கிலீஷ் மீடியம்லாம் படிக்கிறல்ல...? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு பாப்பம்...?”
“என்ன கேள்வி?”
“வல்கோனான்னா என்ன?”
“வல்கோனாவா? அப்புடீன்னு ஒன்னு இருக்கா என்ன...?”
“ஏய்... நல்லா யோசிச்சுப் பார்றா... ஒன்னோட பாடப் புத்தகத்துல கூட வருமே...?”
“ம்ம்ம்...” பலமா யோசிச்சான் பய. பலவேசத்துக்கு நெருப்பு மேல நிக்கிற மாறி இருந்துச்சு. “தெரியாதுன்னு சொல்லிருவானோ...? அப்புடிச் சொல்லிட்டா என்ன செய்யிறது...? எப்புடியாவுது சரியான பதிலச் சொல்லிட்டான்னாக்க நல்லாருக்கும்...” ன்னு அடிச்சுக்கிச்சு மனசு.
“ம்... தாத்தா... வல்கனோன்னு தான் நான் படிச்சிருக்கேன்... நீங்க கேக்கிற மாதிரி வல்கோனான்னு ஒன்னும் இல்லையே... ஒரு வேளை... நீங்க வல்கனோவைத்தான் அப்புடிக் கேக்குறீங்களோ...?” வெவரமா ஒரு பதிலு கேள்வியப் போட்டான் பய.
“ஆகா... ஒரு வேளை வல்கனோவைத்தான் சின்னப்பாண்டி வல்கோனான்னு கேட்ருப்பானோ...?” கொழம்பிப் போயிட்டாரு பலவேசம்.
“பேரஞ் சொல்றத வச்சுப் பாக்குறப்போ... புத்தகத்துல போட்ருக்றது சரியாத்தான் இருக்கும்... பையந்தான் தப்பாக் கேட்ருக்கணும்...” ங்கிற அனுமானத்துக்கு வந்தாரு.
இம்புட்டுத் தூரம் தான் தேடிக்கிட்ருந்த அந்த வார்த்தையும் புத்தகத்துல இருக்க இந்த வார்த்தையும் ஒன்னாத்தான் இருக்கணும்ன்னு அவரோட உள்மனசு சொல்லுச்சு.
“எப்புடியோ புத்தகத்துல அந்த வல்கோனா இருக்குங்கிற வரைக்கும் கண்டு புடிச்சாச்சு...இனிமே வல்கனோன்னா என்னான்னு கண்டுபிடிச்சாவனும்...” ன்னு நெனச்சுக்கிட்டே, “ம்... ஆமாடா... அதத்தான் கேட்டேன்...” னாரு ரொம்ப ஆவலா...
“என்ன தாத்தா... கேள்வியே ஒழுங்காக் கேக்கத் தெரியலை உங்களுக்கு...?” ன்னு எளக்காரமா சிரிச்சான் பேரன்.
“எல்லாம் எனக்குத் தெரியும்டா... ஒனக்குத் தெரியுமான்னு தான் கேட்டேன்...” விடாக்கண்டன் மாறி வெனயமாக் கேட்டாரு தத்தா.
“அதான் ஒங்களுக்குத் தெரியும்ல...? அப்பறம் ஏன் எங்கிட்டே கேக்குறீங்க...?” கொடாக்கண்டன் மாறி கொக்கியப் போட்டான் பேரன்.
“அடடா...மொதலுக்கே மோசமாயிருச்சே...? என்னடா இது...? இவ்ளோ தூரம் வந்தாச்சு... இப்ப வந்து மொரண்டு புடிக்கிறானே...?” ன்னு பதறிப்போனாரு பலவேசம்.
தன்னோட முயற்சியில கிஞ்சித்தும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாறி, “பரவால்லடா. நீ எப்புடிப் படிக்கிறேன்னு தாத்தா தெரிஞ்சிக்க வேணாமா...? அதான் கேட்டேன்... எங்கே சொல்லு பாப்போம்...?” ன்னு பக்குவமாத் தூண்டியப் போட்டாரு...
“வல்கனோன்னா... எரிமலை... தாத்தா...” ன்னு பெருமிதமா சொன்ன பேரன், அந்த வார்த்தையைப் பத்துன ஒரு சிறு குறிப்பையே அவருக்கிட்ட வரைஞ்சுபுட்டான்.
கடசீல மீனு சிக்கிருச்சுனே நம்பிட்டாரு பலவேசம். தமிழ்வழி சமூக அறிவியல்ல எரிமலையப் பத்துன பாடம் இருக்கிறதையும், பேரப் புள்ள சொன்ன பதிலோட அது ஒத்துப் போறதையும் வச்சு, தன்னோட கேள்விக்கி பதிலு இதாத்தான் இருக்குங்கிற முடிவுக்கு வந்து, “ப்பூ... இம்புட்டுத்தானா விசயம்...? இது தெரியாமத்தான் நாம இவ்ளோ சிரமப்பட்டமா...?” ன்னு தன்னத்தானே நொந்துக்கிட்டாரு.
உண்மைலேயே, “வல்கனோ” (எரிமலை) ங்கிறதத்தான் சின்னப்பாண்டி அவருக்கிட்ட கேள்வியாக் கேட்டுருக்கான். பாவம், அவன் அறிவோட நீள அகலம்லாம் “கல்கோனா” முட்டாயி வரைக்குந்தான் பரந்து விரிஞ்சுருக்கு. அதுனாலதான் “வல்கனோ” ங்கிற வார்த்தை அவனுக்கு “வல்கோனா” வாத் திரிஞ்சுபோச்சு.
இந்த வெவகாரம் தெரியாத பலவேசம், மேற்படி “வல்கோனா” வத் தேடி வலைய வீசியிருக்காரு பாவம். “எரிமலை” ங்கிற தமிழ்ப்பதம் அவருக்குத் தெரியும். ஆனா, அதுகுக்குண்டான ஆங்கிலப் பதந்தான் அவருக்குத் தெரிஞ்சிருக்கல. அதுனாலதான் இத்தனை கூத்தும் கொழப்பமும்.
“காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ச...” ங்கிற மாறி, ஆட்டோ ஒர்க்சாப்பு பேர்ப்பலகையில “இங்கு வல்கனைசிங் செய்து தரப்படும்...” ன்னு போட்ருக்கிறதப் பாத்து அங்கலாம் போயி விசரிச்சுருக்காரு.
“ச்சே... இதக் கண்டு பிடிக்கவா இவ்ளோ மெனக்கெட்டோம்? கேவலம் ஆட்டோ ஒர்க்சாப்புல போய்த் தேடிப் பாத்துருக்கோமே...?” ன்னு நெனைக்கிறப்ப அவரோட அறியாமைய நெனச்சு வெக்கமா இருந்துச்சு அவருக்கு... அதே நேரம் அந்த வார்த்தைக்கி “புசுவாண” த்தை ஒப்பாச் சொன்ன சின்னப்பாண்டிய நெனச்சா சிரிப்பாவும் இருந்துச்சு.
“ஏதோ இந்தளவுக்குப் பரவால்ல... பொண்டாடிக்கிட்டயோ... மகங்கிட்டயோ... இல்ல ஆட்டோ ஒர்க்சாப்புக் காரங்கிட்டயோ... போவ இருந்த மானத்தை... நம்ம பேரப்புள்ள காப்பாத்திப்புட்டான்...” ன்னு நிம்மதிப் பெருமூச்சு விட்டாரு.
மனச அரிச்சுக்கிட்டுருந்த கேள்விக்கு வெடை கெடைச்ச சந்தோசத்துல அப்புடியே பேரனைத் தூக்கி, உச்சிமோந்து, ஆனந்தக் கூத்தாடுனாரு பலவேசம்.
“நம்ப சரியாப் பதிலு சொன்னதுனாலதான் தாத்தா நம்பளக் கொண்டாடுறாரு...” ன்னு நெனச்சு பூரிச்சுப் போயிட்டான் பேரன்.
தன்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராம, விசயத்தக் கண்டுபுடிச்ச தன்னோட தெறமைய நெனச்சுத் தனக்குதானே ஒரு பக்கம் மெச்சிக்கிட்டாலும், “ஏதோ பேரனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறதுனால அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சு இருக்கு... அந்த மாறி ஒரு வசதி வாய்ப்பு, பாவம் பட்டிக்காட்டுப் பசங்களுக்கு இல்லையே...? அவிங்களோட அறிவுப் பசியை எப்புடித் தீத்து வைக்கப்போறோமோ...?” ன்னு நெனைக்கையில அவருக்கு நெஞ்சு கணத்துப்போச்சு.
எது எப்புடியோ... ஒருவழியா... வல்கோனாவை கண்டுபுடிச்ச சந்தோசம் அவரு மனசுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா எறங்கிக்கிட்டு இருக்க, “மொதல்ல இத சின்னப்பாண்டிக்கிட்ட சொல்லிரணும்...” ன்னு அவரு நெனச்ச அதே நேரம்...
இந்த வல்கோனாவை உண்மையிலேயே தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட சின்னப்பாண்டியோ... அவுக அப்பா அம்மா தலையில சொமக்குற பாரத்த... தன்னோட நெஞ்சுல சொமந்துக்கிட்டு... கொத்தடிம வேலை செய்ய... குடும்பத்தோட ஆந்திராவுக்கு வண்டி ஏறுறதுக்காண்டி... பெரியபட்டி பிரிவைப் பாத்து போய்க்கிட்டு இருக்கான்...!
பின் குறிப்பு:- "குடைச்சல் முற்றும்..." ன்னு இந்தச் சோக முடிவோட முடிச்சுக்கலாம்ன்னுதான் நான் ஏற்கனவே முடிவு பண்ணிருந்தேன்... ஆனா... இதையே தொடர்ந்து... "சின்னப்பாண்டியின் கதி என்ன ஆனது...?" ங்கிறத, ஒரு மகிழ்வான முடிவோட அடுத்த பதிவுல முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க...?